Tamilசினிமா

’விலங்கு’ வெப் தொடரின் இயக்குநர் இயக்கும் படத்தில் நாயகனாக நடிக்கும் சூரி

கதையின் நாயகனாக உயர்ந்து வெற்றி வாகை சூடி இருக்கும் நடிகர் சூரி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘கருடன்’ படத்தை தொடர்ந்து, கொட்டுக்காளி படத்தில் நடித்துள்ளார். படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. திரைப்படம் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிக்கும் புதிய திரைப்படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. ‘ஹாட்ரிக் கமர்சியல் ஹீரோ’ சூரி கதையின் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தை ‘விலங்கு’ எனும் இணைய தொடரை இயக்கி அனைவரது கவனத்தையும் கவர்ந்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்குகிறார்.

இந்த திரைப்படத்தில் நடிக்கும் ஏனைய நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். சூரி -பிரசாந்த் பாண்டியராஜ் -லார்க் ஸ்டுடியோஸ் கே. குமார் ஆகியோர் ஒன்றிணைந்திருப்பதால் இந்தத் திரைப்படமும் பிரம்மாண்டமான வெற்றியை பெறும் என்ற எதிர்பார்ப்பையும், நம்பிக்கையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இப்படம் முழுக்க முழுக்க குடும்ப பொழுதுப்போக்கு திரைப்படமாக உருவாக இருக்கிறது. படத்தின் ஒன் லைன் கேட்ட சூரி ” இந்த மாதிரி ஒரு கதைக்குத்தான் இவ்வளவு நாள் காத்து இருந்தேன் என்று கூறியுள்ளார். படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக தற்பொழுது நடந்து வரும் நிலையில் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.