Tamilவிளையாட்டு

விராட் கோலியின் இடத்தை இளம் வீரர்கள் பயன்படுத்த இதுவே சரியான வாய்ப்பு – சச்சின் டெண்டுல்கர் கருத்து

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி முடிந்தபிறகு இந்திய அணி கேப்டன் வீராட் கோலி நாடு திரும்புகிறார். அவரது மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு குழந்தை பிறக்க இருப்பதால் எஞ்சிய 3 டெஸ்டில் விளையாட மாட்டார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் வீராட் கோலி விளையாடாமல் போனது இந்திய அணிக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்று வல்லுனர்கள் கருதுகின்றனர்.

வீராட் கோலி விட்டு செல்லும் வெற்றிடம் ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாக அமையும் என்று அந்நாட்டு முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர்.

இது தொடர்பாக கிரிக்கெட்டின் சகாப்தம் தெண்டுல்கர் கூறும்போது, ‘தனி ஒரு வீரரை நம்பி ஒரு அணி இருக்க முடியாது’ என்றார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

வீராட் கோலி மாதிரி அனுபவ வீரர் பேட்டிங் வரிசையில் இல்லாதது இந்தியாவுக்கு பாதகம் தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை.

அதே நேரத்தில் 11 வீரர்களும் சேர்ந்து விளையாடுவது தான் கிரிக்கெட். தனி ஒரு வீரரை சார்ந்து ஒரு அணி இருக்க முடியாது என்பதை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதனால் வீராட் கோலி விட்டுச்செல்லும் வெற்றிடத்தை நிரப்ப திறமை வாய்ந்த இளம் வீரர்கள் ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி கொள்ளலாம்.

இந்திய அணியின் பந்து வீச்சு பலம் வாய்ந்து இருக்கிறது. வேகப்பந்து, சுழற்பந்து என அனைத்திலும் வலிமையுடன் இருக்கிறது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு நாம் பந்துவீச்சு மூலம் சவால் கொடுப்போம்.

இவ்வாறு தெண்டுல்கர் கூறியுள்ளார்.

கடந்த முறை (2018-19)ஆஸ்திரேலியா மண்ணில் வீராட் கோலி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் தொடரை முதல் முறையாக கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.