Tamilவிளையாட்டு

விம்பிள்டன் டென்னிஸில் ரஷ்யா, பெனராஸ் வீரர்களுக்கு தடை – ஜோகோவிச், நடால் கண்டனம்

உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு 2 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ரஷியா மீது பல்வேறு தடைகளை விதித்து வருகின்றன. அதேபோன்று ரஷியா மற்றும் பெலாரஸ் நாட்டை சேர்ந்த டென்னிஸ் வீரர்கள் நடைபெறவுள்ள விம்பிள்டன் போட்டியிலும் கலந்துகொள்ள முடியாது என தடைவிதிக்கப்பட்டது.

இந்த தடையால் அமெரிக்க ஓபன் சாம்பியன் டேனில் மெத்வதேவ், ஆண்ட்ரி ரூப்ளேவ், ஃபிரெஞ்ச் ஓபன் போட்டியில் 2வது இடம் பிடித்த அனஸ்தேசிய பாவ்லியுசென்கோவா உள்ளிட்ட முக்கிய ரஷிய வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல பெலாரசை சேர்ந்த விக்டோரியா அஜரென்காவும் விளையாடுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளார். இவர் ரஷிய படைகளுக்கு ஆதரவாக பேசியிருந்தார்.

இதற்கு டென்னிஸ் நட்சத்திரங்கள் ரஃபேல் நடால், ஜோகோவிக் ஆகியோர் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து நடால் கூறியதாவது:-

ரஷியாவை சேர்ந்த எனது டென்னிஸ் நண்பர்கள், சக வீரர்கள் விம்பிள்டனொல் விளையாடுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளனர். நடைபெற்று வரும் ரஷிய போருக்கு அவர்கள் ஒன்றும் காரணம் கிடையாது. அவர்களுக்காக நான் மன்னிப்பு கேட்கிறேன்.

ரஷிய வீரர்களின் தடை விம்பிள்டன் எடுத்த முடிவு. அரசாங்கம் அவர்களை கட்டாயப்படுத்தவில்லை. வரும் வாரங்களில் என்ன நடக்கும் என்பதை பார்ப்போம். இதுகுறித்து வீரர்கள் எதாவது முடிவு எடுக்க வேண்டும்.

இவ்வாறு நடால் தெரிவித்திருந்தார்.

இந்த தடை குறித்து ஜோகோவிச் கூறுகையில்,

கடந்த வருடம் கொரோனா தடுப்பூசி போடாததால் ஆஸ்திரேலியாவில் இருந்து நான் வெளியேற்றப்பட்டேன். அதுவும் இதும் ஒன்றல்ல. இருப்பினும் நான் எத்தகைய சிக்கல்களை சந்தித்தேனோ அதேபோன்ற சிக்கல்களை தான் எனது நண்பர்கள் சந்திக்கிறார்கள். நான் இப்போதும் என் நிலைபாட்டில் உறுதியாக இருக்கிறேன். நான் விம்பிள்டனுக்கு ஆதரவு தர மாட்டேன். இது நியாயம் அல்ல. இது சரியல்ல.

இவ்வாறு ஜோகோவிச் தெரிவித்துள்ளார்.

இவர்களின் கருத்துக்கு விம்பிள்டன் போட்டியை நடத்தும் அனைத்து இங்கிலாந்து கிளப் பதிலடி கொடுத்துள்ளது. இத்தகைய நியாயமற்ற மற்றும் இதற்கு முன் இல்லாத ராணுவ ஆக்கிரமிப்பின் சூழ்நிலையில்,டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ரஷ்ய அல்லது பெலாரஸ் வீரர்கள் பங்கேற்பது மூலம் ரஷ்ய ஆட்சி எந்த நன்மையையும் பெறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என கூறியுள்ளது.