Tamilசினிமா

விஞ்ஞானிக்காக இயக்குநராகும் மாதவன்!

திரவ எரிபொருளை பயன்படுத்தி ராக்கெட்டை வடிவமைத்த குழுவில் இடம்பெற்ற இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் பணத்துக்காக ராக்கெட் ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக 1994-ல் கைது செய்யப்பட்டார். பின்னர் போலீஸ் விசாரணையில் அவர் சித்ரவதை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டு அவர் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார். மீண்டும் பணியில் சேர்ந்த அவருக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படவில்லை. 2001-ல் ஓய்வு பெற்றார். பொய் வழக்கில் தன்னை சிக்க வைத்த அதிகாரிகள் மீது நம்பிநாராயணன் தொடர்ந்த வழக்கில் அவருக்கு ரூ.50 லட்சம் நஷ்ட ஈடு வழங்க கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த நிலையில், நம்பிநாராயணன் வாழ்க்கை தற்போது சினிமா படமாக தயாராகிறது. ராக்கெட்ரி – தி நம்பி விளைவு என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் நம்பி நாராயணன் வேடத்தில் மாதவன் நடிக்கிறார்.

ஆனந்த் மகாதேவன் மற்றும் மாதவன் இணைந்து இந்த படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தவிர்க்க முடியாத சில காரணங்களால் ஆனந்த் மகாதேவன் இந்த படத்தில் இருந்து வெளியேறுவதாக மாதவன் அறிவித்துள்ளார். இதன்மூலம் மாதவனே தனது முதல் படத்தை இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. உலகத்திற்கு தெரியாத நம்பி நாராயணின் கதையை இந்த படத்தின் மூலம் சொல்லப்போவதாக கூறியுள்ளார்.

நம்பிநாராயணனின் இளம் வயது வாழ்க்கை, இஸ்ரோவில் பணிக்கு சேர்ந்தது, சாதனைகள், பொய்வழக்கில் சிக்க வைத்தது, கைது நடவடிக்கை ஆகியவை படத்தில் இடம்பெறுகின்றன. இந்த படத்தில் மாதவன் 3 தோற்றங்களில் வருகிறார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் இந்த படம் தயாராகிறது.

இந்த நிலையில், நம்பி நாராயணன் வேடத்தில் இருக்கும் தனது தோற்றத்தை மாதவன் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் இந்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *