Tamilசினிமா

விஜய் படத்தை கேலி செய்து சர்ச்சையில் சிக்கிய சந்தீப் கிஷன்

தமிழில் மாநகரம், மாயவன், நெஞ்சில் துணிவிருந்தால் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் சந்தீப் கிஷன். இவர், விஜய் நடித்த சுறா படம் வெளியானபோது அதை கேலி செய்து சமூக வலைதளத்தில் பதிவுகள் வெளியிட்டு இருந்தார். அதன்பிறகு சில வருடங்கள் கழித்து விஜய்யை பாராட்டியும் பதிவிட்டுள்ளார்.

இந்த இரண்டு பதிவுகளையும் வைத்து விஜய் ரசிகர்கள் தற்போது சந்தீப் கிஷனை வலைத்தளத்தில் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். மீம்ஸ்களை உருவாக்கியும் அவரை கேலி செய்கின்றனர். இது வலைத்தளத்தில் பரபரப்பானது.

இதுகுறித்து நடிகர் சந்தீப் கிஷன் கூறியதாவது: “இதை நான் யாருக்கும் நிரூபிக்க தேவை இல்லை. ஆனாலும் எனது வார்த்தைகளை மறுபரிசீலனை செய்ய தோன்றியது. எனக்கு விஜய்யை மிகவும் பிடிக்கும். எனக்கு கஷ்டமான நேரங்களில் பல வகையில் ஊக்கப்படுத்தி இருக்கிறார்.

இதில் வெட்கப்படுவதற்கு எதுவும் இல்லை. விஜய் படங்களை பார்த்து ரசித்துத்தான் நான் வளர்ந்து இருக்கிறேன். இடையில் சில காலம் மட்டும் ஒரு வழக்கமான ரசிகனாக தொலைந்து போனேன். ஆனால் கடந்த 10 வருடங்களில் அவரது பயணம் எனக்கு ஊக்கத்தை அளித்து இருப்பதாக பெருமையோடு கூறுவேன். இன்று நான் அவரது மிகப்பெரிய ரசிகனாக இருக்கிறேன்” என்றார்.