Tamilசினிமா

விஜய் படத்தில் நடித்தது ஒரு ஆசீர்வாதம் – நடிகை சம்யுக்தா

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த மாத இறுதிக்குள் இதன் முழு படப்பிடிப்பும் முடிவடைந்துவிடும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தில் நடித்த சம்யுக்தா, வாரிசு படம் பற்றிய தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

காஃபி வித் காதல் ஆடியோ வெளியீட்டு விழாவில் செய்தியாளர்களை சந்தித்த சம்யுக்தா, “வாரிசு படம் பயங்கரமா வந்திருக்கு. ரொம்ப பிரம்மாண்டமா இருக்கு. எனக்கு அவர்கூட டயலாக் எதுவும் இல்லை, ஆனால் இது குடும்பப்படம் என்பதால் அவர் வரும் சில காட்சியில் எல்லோரும் இருப்போம். அவர் நடிப்பு எல்லாம் வேற லெவல்ல இருக்கு.

முதல் முறையாக இதை நேரில் பார்ப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது ஒரு ஆசீர்வாதமாக நினைத்து கொள்கிறேன். படப்பிடிப்பு தளத்தில எல்லார்கிட்டயும் நல்லா பழகுவார். ஒரு ஸ்டார் மாதிரி நடந்து கொள்ளாமல் எளிமையான ஒருத்தராக நடந்துகொள்வார். சொல்லப்போனால் படப்பிடிப்பு தளத்தில் அவரது குடையை அவரே பிடித்து கொள்வார்” என கூறினார். வாரிசு திரைப்படம் 2023- ஆம் ஆண்டு பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.