விஜய் சொகுசு கார் வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு

நடிகர் விஜய் கடந்த 2005-ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து 63 லட்ச ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை இறக்குமதி செய்திருந்தார். இந்தக் காருக்கான நுழைவு வரியை அவர் செலுத்த தாமதப்படுத்தியதாக கூறி வணிக வரித்துறை அபராதம் விதித்தது. இதற்கிடையே, விஜய் தரப்பில், ஏற்கனவே நுழைவு வரி செலுத்தப்பட்டுவிட்டது. அதிகப்படியான அபராதம் விதித்ததை எதிர்த்தே வழக்கு தொடர்ந்துள்ளேன். ஆகவே அபராதம் விதிப்பது தொடர்பான நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கூறி மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மார்ச் 14-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் விஜய்யின் மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்யவேண்டும் என வணிகவரித்துறை கூறியது. இது குறித்து மேலும் சில விபரங்களைக் கேட்ட நீதிபதி, நடிகர் விஜய் வழக்கின் தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

இந்நிலையில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், சொகுசு கார் விவகாரத்தில் அபராதத்தை ரத்து செய்யக்கோரிய நடிகர் விஜய் மனு மீது சென்னை ஐகோர்ட்டு இன்று (15.07.2022) தீர்ப்பளித்துள்ளது. நடிகர் விஜய் இறக்குமதி செய்த காருக்கு 2019 ஜனவரிக்கு முன் முழு நுழைவு வரியையும் செலுத்தியிருந்தால் அபராதம் விதிக்க கூடாது என்றும் 2019 ஜனவரிக்கு பின்னும் நுழைவு வரியை முழுமையாக செலுத்தியிருக்காவிட்டால் அபராதம் விதிக்கலாம் என்றும் வணிக வரித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.

அதேப்போன்று இறக்குமதி கார்களுக்கு நுழைவு வரி செலுத்த வேண்டியது கட்டாயம் என கூறிய உயர்நீதிமன்றம், நுழைவு வரியை ரத்து செய்யக் கோரி இசையமைப்பாளர் ஹாரீஷ் ஜெயராஜ் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகளையும் முடித்து வைத்தது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools