விஜயின் பிகில் படத்திற்கு எதிராக பூ வியாபாரிகள் போராட்டம் நடத்த முடிவு

விஜய்-நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள படம் பிகில். அட்லீ இயக்கியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. தீபாவளியை முன்னிட்டு வருகிற அக்டோபர் 25-ந் தேதி பிகில் படம் திரைக்கு வருகிறது. இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இது ஒருபுறம் இருக்க பிகில் படத்திற்கு எதிர்ப்புகளும் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. கடந்த மாதம் பிகில் பட போஸ்டர் இறைச்சி வியாபாரிகளை இழிவுபடுத்தும் வகையில் உள்ளதாக கூறி, கறிக்கடை உரிமையாளர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்திருந்தனர். இதையடுத்து அவர்களுக்கு இறைச்சி வெட்டும் கட்டை, கத்தி உள்ளிட்ட பொருட்களை வழங்கி விஜய் ரசிகர்கள் சமாதானம் செய்தனர்.

இந்நிலையில், பூ வியாபாரிகள் குறித்து அவதூறாக பேசியதாக நடிகர் விஜய்க்கு பூ வியாபாரிகள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பிகில் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், பூக்கடைக்காரர்களை பட்டாசு கடையில் வேலைக்கு வைத்தால், பட்டாசு மேல் தண்ணீர் தெளித்து விடுவார்கள் என்று பேசினார். இந்த பேச்சு தங்களது மனதை புண்படுத்திவிட்டதாக கூறிய திருச்சி ஸ்ரீரங்கம் சாத்தார வீதி பூச்சந்தை, அண்ணா புஷ்ப தொழிலாளர்கள் சங்கத்தினர், விஜய் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் பிகில் படத்தை புறக்கணிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools