Tamilசெய்திகள்

விக்ராந்த் ஐ.என்.எஸ் முந்தைய அரசுகளின் கூட்டு முயற்சி – காங்கிரஸ் கருத்து

இந்தியாவில் முற்றிலும் வடிவமைத்து கட்டப்பட்டுள்ள விமானம் தாங்கி போர்க்கப்பல், ஐ.என்.எஸ். விக்ராந்தை பிரதமர் மோடி நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்து பேசினார்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:-

இந்த கப்பலை பொறுத்தமட்டில் மோடி அரசு எதுவும் செய்தது இல்லை. இந்த கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்த நேரத்தில் மோடி அரசு ஆட்சி அதிகாரத்தில் உள்ளது. உள்ளபடியே சொல்வதென்றால், பல்லாண்டுகளுக்கு முன்னர் (காங்கிரஸ் கட்சியின்) ஏ.கே.அந்தோணி ராணுவ மந்திரியாக இருந்தபோதுதான் இந்த கப்பல் கட்டும் பணியை தொடங்கி வைத்தார்.

இதை வடிவமைத்து, கட்டி, வெள்ளோட்டம் விட்டு, வெளியிட்டு, இன்று கடைசியாக நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மோடி அரசு செய்தது, நாட்டுக்கு அர்ப்பணித்ததும், அதற்கான பெயரைத்தட்டிச்சென்றதும் தான். ஐ.என்.எஸ். விக்ராந்த் முந்தைய அரசுகளின் கூட்டு முயற்சி ஆகும்.

எனவே இது தற்போதைய பிரதமருக்கு வழக்கமாகிவிட்ட கபட நாடகம். இந்த கப்பலுக்கான பெயர், முந்தைய அரசுகளுக்கும், இந்திய கடற்படைக்கும், விஞ்ஞானிகளுக்கும், கப்பல் கட்டும் தளத்தில் உள்ள என்ஜினீயர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் சேர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.