Tamilசினிமா

விக்ரமை பார்க்க குவிந்த மக்கள் – அடித்து விரட்டிய பாதுகாப்பு படை

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடிப்பில் வருகிற ஆகஸ்ட் 31-ம் தேதி கோப்ரா திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் அறிமுக நிகழ்ச்சி திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் இன்று நடைபெற உள்ளது.

இதில் பங்கேற்பதற்காக விக்ரம் மற்றும் கோப்ரா படக்குழுவினர் உள்ளிட்ட 9 பேர் இன்று காலை 8.20 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்றனர். அவர்களை வரவேற்க ரசிகர்கள் ஏராளமானோர் விமான நிலையத்தில் திரண்டிருந்தனர்.

விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த விக்ரமை பார்த்த ரசிகர்கள் ஆர்வம் மிகுதியில் அவரை சூழ்ந்து கொண்டு ஆரவாரத்தில் ஈடுபட்டனர். பலர் முண்டியடித்துக் கொண்டு அவருக்கு முன்பாக நின்று செல்பி எடுக்க முயன்றனர். பாதுகாப்பு கருதி போலீசாரும் விக்ரமை சுற்றி பாதுகாப்பு வளையம் அமைத்திருந்தனர். அப்போது அங்கிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ரசிகர்களை கட்டுப்படுத்த முயன்றனர்.

இந்நிலையில் அவர்களை மீறி ரசிகர்கள் விக்ரமை நெருங்க முயன்றபோது மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ரசிகர்களை அடித்து துரத்தினர். இதனால் விமான நிலையத்தில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் விக்ரமை பாதுகாப்புடன் அழைத்து சென்று காரில் அனுப்பி வைத்தனர்.