Tamilசெய்திகள்

விக்கிரவாண்டி இடைத் தேர்தல் – மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடந்தது

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் ஜூலை 10-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14-ந் தேதியன்று விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் தொடங்கி 21-ந்தேதியுடன் முடிவடைந்தது.

இத்தொகுதியில் போட்டியிடுவதற்காக தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா, பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயா, ஆகியோர் உட்பட 16 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

இவர்களில் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவாவுக்கு மாற்று வேட்பாளராக அவரது மனைவி வனிதா, பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணிக்கு மாற்று வேட்பாளராக ரங்கநாதன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயாவுக்கு மாற்று வேட்பாளர் கலைச்செல்வி, தமிழ் தாயக மக்கள் முன்னேற்ற கட்சி வேட்பாளர் முகமது ஹனீபாவுக்கு மாற்று வேட்பாளர் கலைச்செல்வி, தமிழ் தாயக மக்கள் முன்னேற்ற கட்சி வேட்பாளர் முகமது ஹனீபாவுக்கு மாற்று வேட்பாளராக முகமது இலியாஸ் ஆகிய 4 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். இவர்களை தவிர சுயேச்சை வேட்பாளர்களாக சதீஷ், விஜயா, அரசன், இசக்கிமுத்து உள்பட 36 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

விக்கிரவாண்டி தொகுதியில் 56 வேட்பாளர்கள், வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மேலும் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா 3 மனுக்களும், பா.ம.க. வேட்பாளர் அன்புமணி 2 மனுக்களும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா 2 மனுக்களும், தாக்கம் கட்சி வேட்பாளர் முத்தையா 2 மனுக்களும், அம்பேத்கரைட் பார்ட்டி ஆப் இந்தியா கட்சியை சேர்ந்த சரசு 2 மனுக்களும், தமிழ் தாயக மக்கள் முன்னேற்ற கட்சி வேட்பாளர் முகமது ஹனீபா 2 மனுக்களும், அகிம்ஷா சோசியலிஸ்ட் கட்சியை சேர்ந்த ரமேஷ் 2 மனுக்களும் தாக்கல் செய்துள்ளனர். அந்த வகையில் மொத்தம் 64 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

இந்த மனுக்கள் மீதான பரிசீலனை இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. மனுக்கள் பரிசீலனை இன்று மாலை அல்லது நாளை காலை உத்தேச வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும். மனுக்களை வாபஸ் பெறுவதற்கு 26-ந்தேதி (புதன்கிழமை) கடைசி நாளாகும். அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.