Tamilஜோதிடம்

வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் பாரதத்தில் முதல் முறையாக சொர்ண சனீஸ்வரருக்கு ஆலயம் ஜூண் 14 ல் மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் பாரதத்தில் முதல் முறை முறையாக ஸ்ரீ சொர்ண சனீஸ்வரர் ஆலயம் வருகிற ஜூண் மாதம் 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 7.30 மணி முதல் 9.00 மணிக்குள்ளாக ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தலைமையில் நடைபெற உள்ளது. இவருடன் ஸ்ரீ லக்ஷ்மி வராஹருக்கும் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

சனி பகவானின் சிறப்பு :

ஒரு மனிதனை அவரவர் பூர்வபுண்ணியத்திற்கு தகுந்தவாறு வாழ்க்கை பாதையை கொண்டு செல்பவர்கள் நவக்கிரகங்களே. அந்த நவக்கிரகங்களில் ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனிபகவான். இவரது பெயர்ச்சியின் அடிப்படை மட்டுமின்றி பாவ புண்ணியங்களை அடிப்படையாகக் கொண்டு ஒருவரின் வாழ்க்கையில் நீதிமான் போல செயல்பட்டு அதற்கேற்ற பலன்களை தருபவர் இவர். இவரது பார்வையில் சனிபகவான் உட்பட யாரும் தப்ப முடியாது. சனி பகவான் ஒவ்வொருவரின் ஜாதகத்தில் ஆயுள்காரனாக விளங்குவதால் உலகின் சகல ஜீவராசிகளுக்கும் ஆயுளை தீர்மானிக்கும் ஆற்றல் பெற்றவர் இவரே. பல்வேறு சிறப்புகள் வாய்ந்த சனீஸ்வர பகவான் பொதுவாக கோயில்களில் நவக்கிரகங்களுடன் சேர்ந்திரிப்பார். ஒரு சில பரிகாரக் கோயில்களில் தனி சன்னதிகளில் மூல மூர்த்தியாக காட்சி தருகிறார். அதைப் போலவே வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஈசான்ய மூலையில் 20 அடி அகலம் 27 அடி நீளம் 10 அடி உயரத்தில் 13 படிகள் கொண்டு பாதாளத்தில் மேற்கு நோக்கி சொர்ண சனீஸ்வர பகவான் தனி ஆலயம் அமைத்து கொண்டு பக்தர்களுக்கு தரிசனம் மற்றும் அனுக்கிரகம் செய்ய உள்ளார்.

சொர்ண சனீஸ்வர பகவான் கீழ் பிரதிஷ்டை செய்ய உள்ள சனி யந்திரத்திற்கு சிறப்பு பூஜைகள் :

வருகிற 14.06.2019 வெள்ளிக்கிழமை காலை 7.30 மணி முதல் 9.00 மணிக்குள்ளாக கடக லக்னம் கூடிய ஸ்வாதி நக்ஷத்திரத்தில் ஸ்ரீ சொர்ண சனீஸ்வர ஆலய கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இப்பிரதிஷ்டையை முன்னிட்டு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலுள்ள பிரசித்தி பெற்ற சனி பகவான் ஆலயங்களுக்கு நேரில் சென்றும், ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசி பெற்ற தன்வந்திரி குடும்பத்தினர்கள் மூலமாகவும் ஆங்காங்கே சிறப்பு வழிபாடுகள் செய்யப்படடு வருகிறது. ஒரு சில இடங்களில் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் நேரில் சென்று சனி பகவான் யந்திரத்தை வைத்து சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் செய்து வருகிறார்.

27 நக்ஷத்திரகாரர்களுக்கும் ஒரே பிரார்த்தனை ஸ்தலம் – ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் :

இந்த சனி பகவான் யந்திரத்தை சொர்ண சனீஸ்வர பகவானின் ஆதார பீடத்தில் வைத்து பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. பல்வேறு க்ஷேத்திரங்களில் உள்ள இறைவனின் அனுக்கிரகத்தை பெற்று தன்வந்திரி க்ஷேத்திரத்தில் சொர்ண சனிஸ்வரன் அமையவுள்ளதால் இப்பீடத்திற்கு 27 நக்ஷத்திரக்காரர்களும் வந்து பிரார்த்தனை செய்யும் சிறந்த பிரார்த்தனை ஸ்தலமாகவும், ஆரோக்ய, ஐஸ்வர்ய பீடமாகவும் அமைய உள்ளது.

திவ்ய விஜய யாத்திரையில் பிரசித்தி பெற்ற ஸ்தலங்கள் :

ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள், பாதாள சொர்ண சனீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் சிறப்பாகவும், ஆகர்ஷணம் பொருந்தியதாகவும், வழிபடும் பக்தர்களுக்கு அவரவர்களின் பிரார்த்தனைகள் விரைவில் நடைபெற வேண்டியும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பிரசித்தி பெற்ற க்ஷேத்திரங்களுக்கு திவ்ய விஜய யாத்திரை சென்ற 01.05.2019 முதல் மேற்கொண்டுள்ளார். இதில் கல்பட்டு 21 அடி யோக சனீஸ்வரர் ஆலயம், கோலியனூரில் வாலி பிரதிஷ்டை செய்த தெற்கு நோக்கிய சனீஸ்வர பகவான், மொரட்டாண்டி 27 அடி உயர சனீஸ்வரர், திருநள்ளாறு சனீஸ்வரர் ஆலயம், திருகொள்ளிகாடு பொங்கு சனீஸ்வரர் ஆலயம், திருக்கோடிகாவல், குத்தாலம் பாதாள சனீஸ்வரர் ஆலயம், திருநரையூர் மங்கள சனீஸ்வரர் ஆலயம், காக வாகனம் பெற்றதும் சனி பகவான் சாப விமோசனம் பெற்றதும் திருமணத்திற்கு காரணமானதும் ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஸ்தலமாக விளங்கும் விளாங்குளம் ஸ்ரீ அக்ஷயபுரீஸ்வரர் ஆலயம், எட்டியத்தளி சனீஸ்வரர் ஆலயம், குச்சனூர் சுயம்பு சனீஸ்வரர் ஆலயம், சோழவந்தான் சுயம்பு சனீஸ்வரர் ஆலயம் மற்றும் சூர்யனார் கோயில், ஆலங்குடி, திருநாகேஸ்வரம், உப்பிலியப்பன், ஸ்ரீமூஷ்ணம் பூவராஹர் கோயில், கும்பகோணம் ஆதி வராஹர் கோயில், பிள்ளையார்பட்டி, பட்டுகோட்டை, ஐய்யாவாடி ப்ரத்யங்கிரா கோயில், கஞ்சனூர், திருலோக்கி, திருமங்கலகுடி, கதிராமங்கலம், மன்னார்குடி, வடமதுரை, பரிக்கல் போன்ற பல்வேறு க்ஷேத்திரங்களுக்கு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் நேரில் விஜயம் செய்து சிறப்பு வழிபாடுகள் செய்தார்.

சனி சாந்தி ஹோமத்தின் சிறப்பு :

தீராத வியாதிகளுக்கு முன் ஜென்ம பாவங்களே காரணம். முன் ஜென்ம பாவங்களை தீர்க்கும் ஒரே கடவுள் சனீஸ்வரர்தான். இவரை வணங்குவதால் 12 ராசிக்காரர்களுக்கும் ஏற்படும் ஜன்ம சனி, ஏழரை சனி, அர்த்தம சனி, அர்த்தாஷ்டம சனி, அஷ்டம சனி, மற்றும் சனி தசை, சனி புக்தி ஆகிய அனைத்து விதமான தோஷங்களும் நீங்கி நன்மைகள் ஏற்படும்.

ஆயுள் கண்டம், இதய நோய், வலிப்பு நோய், தலை சம்பந்தப்பட்ட நோய்கள், எலும்பு, நரம்பு நோய்கள் நீங்கவும், மன அமைதி கிடைக்கவும், கல்வியில் சிறப்பிடம் பெறவும், குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகவும், தீராத நோய்கள் விரைவில் தீரவும், திருமணத்தடை நீங்கவும் தன்வந்திரி பீடத்தில் நடைபெறும் சனி சாந்தி ஹோமத்தில் பங்கேற்று சொர்ண சனீஸ்வரரை வழிபட்டு பலன் பெறலாம்.

ஸ்ரீ லக்ஷ்மி வராஹ ஸ்வாமி :

வராகம் என்றால் பன்றி என்று பொருள். மகாவிஷ்ணு பன்றி முகத்தோடு, தன் இடது தொடையில் செல்வத்தின் அதிபதியான லட்சுமிதேவியை அமர்த்திக் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தீயவர்களை ஒடுக்கி நல்லவர்களைப் பாதுகாத்து, தர்மத்தை நிலை நிறுத்துவதற்காக மகாவிஷ்ணு எடுத்த பத்து அவதாரங்களில் மூன்றாவது அவதாரம்தான் வராக அவதாரம். ஹிரண்யாட்சன் என்ற அசுரன் பிரம்மாவை நோக்கிக் கடுந்தவம் புரிந்து, அவன் புரிகிற போரில் எவரும் தன்னை வெற்றி கொள்ளக் கூடாது என்று ஒரு வரம் பெற்றான். அதன் விளைவாக எல்லோரையும் வம்புக்கு இழுத்தான். தேவருலகம் சென்று தேவர்களை முறியடித்தான். வருண பகவானிடம் சண்டையிட்டு, சமுத்திரத்தைக் கைப்பற்றினான். பிறகு, பூமி முழுவதையும் தன் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்து, சமுத்திரத்துக்கு அடியில் பூமியைக் கொண்டு போய் மறைத்து வைத்தான். அசுரனால் பாதிக்கப்பட்டவர்கள் மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட, அவர் சிறிய வராகமாகத் தோன்றி, ஒரு பெரிய மலை அளவுக்கு கிடுகிடுவென்று வளர்ந்து மகா வராகமாக அவதாரம் எடுத்தார். பின், சமுத்திரத்துக்கு அடியில் சென்று ஹிரண்யாட்சனுடன் போரிட்டு அவனை அழித்தார். அவன் மறைத்து வைத்திருந்த பூமியை மீட்டு, மேலே எடுத்து வந்து அதன் இருப்பிடத்தில் நிலைநிறுத்தி அருளினார். அசுரனின் அட்டகாசம் முடிவுக்கு வந்ததால், ஈரேழுலகமும் நிம்மதி அடைந்தது. தேவர்கள் கோவிந்தா! கோவிந்தா என்று விஷ்ணுவைப் போற்றித் துதித்தனர். கோ என்றால் பூமி, விந்தன் என்றால் காத்தவர் என்று பொருள்.

வராக புராணத்தில் ஒரு உரையாடல் வருகிறது. மகாவிஷ்ணுவால் காப்பாற்றிக் கொண்டு வரப்பட்ட பூமாதேவி விஷ்ணுவைப் பார்த்துக் கேட்கிறாள், பிரபு! பிரளய ஜலத்தில் அமிழ்த்தப்பட்ட என்னைக் காத்தருளினீர். இதேபோல், உலகின் ஜீவன்கள் முக்தியை அடைய சுலபமான வழியொன்றை அருளுவீராக! இதற்கு பரமாத்மா வராக சரம ஸ்லோகம் என்று குறிப்பிடப்படும் இரண்டு ஸ்லோகங்களில் பதிலளித்தார்: ஓ, பூமா தேவியே! என் உடல்தான் இந்த உலகம். எனக்குப் பிறப்பு, இறப்பு கிடையாது. எவன் ஒருவன் நல்ல மன நிலையிலும், நல்ல உடல் நிலையிலும் இருக்கிறபோது பக்திபூர்வமாக மலர்கள் தூவி என்னை வழிபட்டுச் சரணடைகிறானோ, அவன் அந்திமக் காலத்தில் தன் இறுதி மூச்சை விடும்போது அவனைப் பரமபதம் (மோட்சம்) அடையச் செய்வேன்!

இத்தகைய சிறப்புகள் பொருந்திய லட்சுமி வராக ஸ்வாமிக்கு ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் தனி ஆலயம் வெகு சிறப்பாக வருகிற 14.06.2019 வெள்ளிக்கிழமை காலை 7.30 மணி முதல் 9.00 மணிக்குள்ளாக கடக லக்னம் கூடிய ஸ்வாதி நக்ஷத்திரத்தில் வித்தியாசமான முறையில் வட்ட வடிவில் அமைகிறது. இக்கோயிலின் கருவறையில் பகவான், கிழக்கு நோக்கி அமர்ந்திருக்க, அவருடைய மடியில் லட்சுமிதேவி வீற்றிருக்கிறார். பகவானுக்கு நான்கு கைகள். இடது கையில் சங்கு, வலது கையில் சக்கரம். மற்றொரு இடது கையால் தேவியை அணைத்துக் கொண்டிருக்கிறார். மற்றொரு வலது கை, அபய முத்திரையுடன் பக்தர்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டிருக்கிறது. இந்த மூலவரின் விக்கிரகம் கருங்கல் சிலா ரூபம். மஹாபலிபுரம் திரு. லோகநாதன் ஸ்தபதியால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வாஸ்து தோஷங்கள் அகலவும், பூமி, மனை, வீடு, போன்றவைகளில் ஏற்படும் தடைகள் விலகவும், ரியல் எஸ்டேட் சம்பந்தமான பிரச்சனைகள் நீங்கவும், நவக்கிரகங்களில் முக்கிய கிரகமான ராகு கிரகத்தினாலும், ராகு திசை ராகு புத்தி நடப்பவர்களுக்கு ஏற்படும் பல்வேறு தோஷங்களில் இருந்து நிவாரணம் பெறவும், திருமணம் கைக்கூடவும், ஐஸ்வர்யங்கள் பெருகவும், பலவிதமான நோய்களில் இருந்து நிவாரணம் பெறவும் அனுக்கிரகம் செய்யக்கூடியவர் ஸ்ரீ லக்ஷ்மி வராஹர். இத்தகைய சிறப்புகள் பொருந்திய வராஹருக்கும் சொர்ண சனீஸ்வரருக்கும் நடைபெறும் கும்பாபிஷேகத்தில், பக்தர்கள் அனைவரும் பங்கேற்று பலன் பெற அன்புடன் அழைக்கின்றோம்.

மேலும் இந்த கும்பாபிஷேகங்கள் சிறப்பாக நடைபெற இவ்வாலயங்களின் விக்ரஹங்களின் கீழ் பிரதிஷ்டை செய்யப்படவுள்ள சனி பகவான் யந்திரம் மற்றும் லட்சுமி வராகர் யந்திரங்களை தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்னாடகம் போன்ற இந்தியாவின் பல பகுதிகளில் உள்ள பிரசித்தி பெற்ற சனி பகவான் மற்றும் லட்சுமி வராஹர் ஆலயங்களில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்ய “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர். ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் 01.05.2019 முதல் திவ்ய விஜய யாத்திரை மேற்கொள்கிறார். இவ்வைபத்தில் ஆங்காங்கே உள்ள தன்வந்திரி குடும்பத்தினர்கள் மற்றும் விருப்பமுள்ள பக்தர்கள் ஸ்வாமிகளை சந்தித்து ஆசிகளை பெற்று யாத்திரைகளிலும் பங்கேற்கலாம்.

இந்த யாத்திரையில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள சனி பகவான் க்ஷேத்திரம் வராஹ க்ஷேத்திரம் மற்றும் பல்வேறு க்ஷேத்திரங்களில் உள்ள புனித தீர்த்தங்கள், புனித மண், புனித கற்கள், முக்கிய மூலிகைகளை சேகரித்து தன்வந்திரி பீடத்தில் 14.06.2019 அன்று நடைபெறும் யாகங்களிலும், கும்பாபிஷேகங்களிலும் சேர்க்கப்படவுள்ளது. இந்த வைபவத்திற்கு பக்தர்கள் அனைவரும் தவராமல் பங்கேற்று இறையருளுக்கு பாத்திரதாரர்களாகி குருவருள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *