Tamilசினிமா

‘வாத்தி’ படத்தை முடித்த தனுஷ் புதிய தெலுங்கு படத்தில் நடிக்க ரெடியானார்

வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வாத்தி’. இப்படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் அடுத்த வருடம் பிப்ரவரி 17-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதனைத் தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இதில் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சுடன் நடைபெற்று வருகிறது.

இதனிடையே தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனரான சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்க ஒப்பந்தமானார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகவுள்ள இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிப்பதாக கடந்த வருடம் அறிவிப்பு வெளியானது. அதன் பிறகு இப்படம் குறித்த எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்ததால் பலரும் குழப்பத்தில் இருந்தனர்.

இந்நிலையில் இப்படம் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் பூஜை நடைபெற்றுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தனுஷ், இயக்குனர் சேகர் கம்முலா உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டுள்ளனர். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் நடிகர்கள் குறித்த பிற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.