Tamilசினிமா

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ‘இந்தியன் 2’!

கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படப்பிடிப்பு சென்னையில் கடந்த மாதம் தொடங்கியது. சில காட்சிகளை படமாக்கியதும் கமல்ஹாசனின் வயதான தோற்றத்தில் இயக்குனர் ஷங்கருக்கு திருப்தி ஏற்படாமல் படப்பிடிப்பை நிறுத்திவிட்டதாகவும், பின்னர் கமல் தோற்றத்தை மாற்றியமைத்து மீண்டும் படப்பிடிப்பை நடத்தியதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது ஷங்கருக்கும், இந்தியன்-2 படத்தை தயாரிக்கும் லைகா புரொடக்‌ஷன் நிறுவனத்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மீண்டும் படத்தை நிறுத்திவிட்டதாகவும் தகவல் பரவி உள்ளது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்கு வந்த 2.0 படத்தையும் லைகா பட நிறுவனமே தயாரித்தது.

அந்த படத்துக்கு திட்டமிட்டதை விட கூடுதல் செலவானதால் தயாரிப்பாளர் தரப்பினர் அதிருப்தியில் இருந்ததாகவும் இந்தியன்-2 படத்தின் பட்ஜெட் திட்டமிட்டதை தாண்டக்கூடாது என்று நிர்ப்பந்தித்ததாகவும் இதனால் படப்பிடிப்பை ஷங்கர் நிறுத்திவிட்டார் என்றும் வலைத்தளங்களில் தகவல்கள் பரவின. படம் கைவிடப்படும் நிலையில் இருப்பதாகவும் கூறப்பட்டது.

இதனை லைகா பட நிறுவனம் மறுத்துள்ளது. அந்த நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் இதுகுறித்து கூறும்போது, “இந்தியன்-2 படத்தை கைவிட்டதாக பரவும் வதந்திகள் தவறானது. ஆதாரமற்றது. சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரி அருகில் உள்ள மெமோரியல் ஹாலில் ஒரு வாரமாக முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு உள்ளன. அடுத்தகட்டமாக ஸ்டுடியோவிலும் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளோம். தற்போது பல இடங்களில் அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடைபெறும்.”

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *