Tamilசெய்திகள்

வட சென்னையில் 37 பள்ளிகளில் காலை உணவு திட்டம் இன்று தொடங்கியது – அமைச்சர்கள் பங்கேற்பு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கனவு திட்டமான அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் தமிழகம் முழுவதும் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டத்தை செயல்படுத்தும் வகையில் தமிழக அரசு ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

மதுரை கீழ அண்ணா தோப்பில் உள்ள மாநகராட்சி பள்ளியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்து மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார். இந்த நிலையில் இந்த காலை உணவு திட்டம் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் முதல் கட்ட மாக வடசென்னை பகுதியில் உள்ள 37 பள்ளிகளில் இன்று தொடங்கப்பட்டது.

மாதவரம் ராஜாஜி தெருவில் உள்ள சென்னை மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் காலை உணவு திட்டத்தை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர். பின்னர் அவர்கள் மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டனர். மேலும் மாணவர்களிடம் பேசி மகிழ்ந்தனர்.

மாணவர்களுக்கு காலை உணவாக கிச்சடி மற்றும் கேசரி வழங்கப்பட்டது. இதனை மாணவர்கள் ருசித்து சாப்பிட்டனர். முன்னதாக மாதவரம் டெர்மினல் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் இருந்து காலை உணவு சமைக்கப்பட்டு வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டது. இதனை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு கொடி அசைத்து அனுப்பினர்.

நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், மாநகராட்சி கமிஷனர் ககன் தீப்சிங் பேடி, நிலைகுழு உறுப்பினர் விஸ்வநாதன், மாதவரம் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான சுதர்சனம், மாதவரம் மண்டல குழு தலைவர் நந்த கோபால் மற்றும் கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:- அ.தி.மு.க. ஆட்சியிலேயே மாநகராட்சிப் பள்ளிகளில் காலை உணவுத்திட்டம் தொடங்கப்பட்டது என்பது போலியான வாதம். ஒரு சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் ஓரிரு நாட்கள் மட்டுமே அந்த உணவு வழங்கப்பட்டது. ஆனால் இப்போது தான் முழுமையான பயனுள்ள காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு தரமான, சுகாதாரமான உணவு வழங்கப்பட உள்ளது. உணவு தயாரிக்கும் பணியில் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு ஈடுபடுத்தப்பட உள்ளனர். 2020-ல் கொண்டுவரப்பட்ட தேசிய கல்விக்கொள்கையில் காலை உணவுத் திட்டம் இருக்கிறது என்று சொன்னால், அப்போதே ஏன் தமிழ்நாட்டில் திட்டத்தை தொடங்கவில்லை?. அப்போது அ.தி.மு.க. தான் ஆட்சியில் இருந்தது. இது பற்றி அவர்களிடம் தான் கேட்க வேண்டும். சர்.பிட்டி.தியாகராஜர், காமராஜர், எம்.ஜி.ஆர்., கருணாநிதி வழியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை உணவுத் திட்டத்தை கொண்டு வந்துள்ளார்.

சாதாரண காய்ச்சல் என்பது இரண்டு நாட்களில் சரியாகிவிடும், இந்த இன்பு ளுயன்சா என்ற காய்ச்சல் வந்த குழந்தைகளை மூன்று முதல் ஐந்து நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும். அவர்கள் தும்மினாலோ இரும்பினாலோ இது பரவ வாய்ப்பு உள்ளது. இப்போது வரை 13 குழந்தைகள் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த மாதம் மட்டும் 9 பேர் உயிரிழந்திருப்பதாகக் கூறி தொடர்ந்து பதட்டத்தை ஏற்படுத்த வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார். இதைத்தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு கூறும்போது, அம்மா உணவகங்களுக்கும், காலைச்சிற்றுண்டி திட்டத்துக்கும் தொடர்பு இல்லை. இந்தத் திட்டத்திற்கு தனியாக உணவகங்கள் அமைக்கப்பட்டு குறித்த நேரத்தில் குறித்த பள்ளிக்கு உணவு தயார் செய்யப்பட்டு அனுப்பப்பட உள்ளது என்றார்.

கொருக்குப்பேட்டை மாநகராட்சி பள்ளி மற்றும் அண்ணா நகர் ஜே.ஜே. நகர் உள்ளிட்ட 8 இடங்களில் ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. ஜே.ஜே.எபினேசர் மற்றும் மாநகராட்சி 4-வது மண்டல குழு தலைவர் நேதாஜி யு. கணேசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். சூரிய நாராயணன் தெருவில் உள்ள மாநகராட்சி பள்ளி, ஆட்டு தொட்டியில் உள்ள மாநகராட்சி பள்ளி உள்ளிட்ட 8 இடங்களில் ராயபுரம் எம்.எல்.ஏ.ஐடிரீம் மூர்த்தி மற்றும் மாநகராட்சி 5-வது மண்டல குழு தலைவர் ஸ்ரீராமலு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.