Tamilசெய்திகள்

வங்காளதேச பிரதமரை சந்தித்த இந்திய கடற்படை தளபதி!

வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா அரசு முறை பயணமாக கடந்த ஜூன் 21-ந்தேதி இந்தியா வந்திருந்தார். அப்போது இருநாட்டு உறவு, வர்த்தகம், நீர்வளம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில் கடற்படைத் தலைவர் அட்மிரல் தினேஷ் கே.திரிபாதி இருதரப்பு பாதுகாப்பு ஈடுபாட்டை ஒருங்கிணைத்து, கடல்சார் துறையில் ஒத்துழைப்பின் புதிய வழிகளை ஆராயும் நோக்கத்துடன் ஜூன் 30-ந்தேதி வங்காளதேசத்திற்கு 5 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.

அப்போது கடற்படை தளபதி அட்மிரல் தினேஷ் கே.திரிபாதி, வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்தார். கலந்துரையாடலின்போது, வங்காளதேச பிரதமர் 1971-ல் வங்காளதேசத்தின் விடுதலைப்போரில் இந்தியாவின் பங்களிப்பை நினைவுகூர்ந்து பாராட்டினார்.

இந்திய கடற்படைக்கும் வங்காளதேச கடற்படைக்கும் இடையிலான இருதரப்பு கடல்சார் நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து சிஎன்எஸ் அட்மிரல் தினேஷ் கே.திரிபாதி பிரதமரிடம் விளக்கினார்.