Tamilவிளையாட்டு

லாரியஸ் விருது வென்றார் சச்சின் டெண்டுல்கர்

விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குவோருக்கு ஆண்டுதோறும் லாரியஸ் விருதுகள் வழங்கப்படுகின்றன. விளையாட்டு உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக இந்த விருது கருதப்படுகிறது. அவ்வகையில் 2019- ஆம் ஆண்டுக்கான லாரியஸ் விருதுகள் வழங்கும் விழா ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நடைபெற்றது.

இதில் 2019-ம் ஆண்டின் சிறந்த வீரருக்கான லாரியஸ் விருது நட்சத்திர கால்பந்து வீரர் மெஸ்சி மற்றும் பார்முலா முன் கார் பந்தயத்தில் 6 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஹாமில்டன் ஆகியோருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது.

இதேபோல் சிறந்த விளையாட்டு வீராங்கனைக்கான விருதை அமெரிக்க ஜிம்னாஸ்டிக்ஸ் ஜாம்பவான் சிமோன் பைல்ஸ் தட்டிச் சென்றார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஆடவருக்கான ரக்பி உலகக்கோப்பையை வென்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு சிறந்த அணிக்கான விருது வழங்கப்பட்டது. ஜெர்மனியின் கூடைப்பந்து ஜாம்பவான் டிர்க் நோவிட்ஸ்கி, லாரியஸ் வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற்றார்.

கடந்த 20 ஆண்டுகளில் விளையாட்டு உலகின் சிறந்த தருணமாக, இந்திய கிரிக்கெட் அணியின் சச்சின் டெண்டுல்கரை, 2011 உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் வென்ற பின், வீரர்கள் தோளில் சுமந்து சென்ற நிகழ்வு அதிக வாக்குகள் பெற்று தேர்வானது. அந்த விருதை சச்சின் பெற்றுக் கொண்டார். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் வாக் இந்த விருதை வழங்கினார்.

விருது பெற்ற பின் பேசிய சச்சின் டெண்டுல்கர், “இது மிகவும் சிறப்பு மிக்கது. உலக கோப்பையை வென்ற போது இருந்த உணர்வுகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஒட்டு மொத்த நாடும் அந்த தருணத்தை கொண்டாடியது” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *