Tamilவிளையாட்டு

ரோகித் சர்மா குறித்து நிருபர் கேட்ட கேள்வி – அதிர்ச்சியான விராட் கோலி

துபாயில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-12 சுற்றில் குரூப்-2 பிரிவில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான். முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் சேர்த்தது. 158 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, விக்கெட் இழப்பின்றி, 17.5 ஓவர்களில் 152 ரன்கள் சேர்த்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இந்த போட்டிக்குப்பின் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது நிருபர் ஒருவர் ‘அடுத்த போட்டியில் மிக சிறப்பான பார்மில் இருக்கும் இஷான் கிஷன் அணியில் சேர்க்கப்பட்டு, ரோகித் சர்மா அணியில் இருந்து நீக்கப்படுவாரா..?’ என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு விராட் கோலி யாரும் எதிர்பாராத வகையில் ஒரு ஷாக் ரியாக்சன் கொடுத்து  ‘இந்த கேள்வியை தெரிந்துதான் கேட்டீர்களா?….  டி-20 போட்டிகளில் ரோகித் சர்மா போன்ற அபாரமான ஆட்டக்காரரை நீக்க வேண்டும் என்று கூறுகிறீர்களா..?’ என கேட்டு சிரித்தார்.

அதனையடுத்து அந்த கேள்வியை கேட்ட நிருபரிடம்,  ‘உங்களுக்கு சர்ச்சை ஏதாவது ஏற்படுத்த வேண்டும் என்று விரும்பினால் என்னிடம் முதலிலேயே கூறிவிடுங்கள், அப்போது தான் நானும் நீங்கள் நினைப்பதை போல சர்ச்சை ஏற்படுமாறு பதில் கூறுவேன்’ என கிண்டலடித்தார். இந்த சம்பவம் குறித்தான வீடியோவும், புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.