Tamilசெய்திகள்

ரேஷன் கடைகளில் பிரதமர் மோடியின் புகைபப்டத்தை கட்டாயம் வைக்க வேண்டும் – அமைச்சர் நிர்மலா சீதாராமன்

தெலுங்கான மாநிலத்தின் ஜஹீராபாத் பாராளுமன்ற தொகுதியில் நேற்று நடைபெற்ற மத்திய அரசின் நலத்திட்ட நிகழ்ச்சியில் மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். பின்னர் அவர் அங்குள்ள ரேஷன் கடையை ஆய்வு செய்தார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காமரெட்டி மாவட்ட ஆட்சியர் ஜிதேஷ் பாட்டீலிடம், ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் இலவச அரிசியில், மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் எவ்வளவு பங்கு உள்ளது என அவர் கேள்வி எழுப்பினார். அது குறித்து மாவட்ட ஆட்சியர் தடுமாற, பதில் அளிக்க அவருக்கு அரைமணி நேரம் அவகாசம் அளிப்பதாக மத்திய நிதி மந்திரி தெரிவித்தார்.

பின்னர் பேசிய அவர், வெளிச்சந்தையில் தோராயமாக ரூ.35க்கு விற்கப்படும் அரிசி, ரேஷன் கடைகளில் ஒரு ரூபாய்க்கு மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது என்றார். இதில் மத்திய அரசு 30 ரூபாயும், மாநில அரசு 4 ரூபாயும் வழங்குவதாகவும், ரேஷன் கடை பயனாளிகளிடம் ஒரு ரூபாய் மட்டும் வசூலிக்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரல் முதல் மாநில அரசு மற்றும் பயனாளியின் பங்களிப்பு இல்லாமல் அந்த அரிசியை மத்திய அரசு இலவசமாக வழங்கி வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் ரேஷன் கடையில் பிரதமர் மோடியின் படத்தை ஏன் காணவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பிரதமர் மோடியின் படத்தை வைக்க வேண்டும் என்று பாஜக கோரிக்கை வைத்ததாகவும், ஆனால் அதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

பாஜகவினர் பிரதமர் மோடியின் பேனரை ரேஷன் கடைகளில் வைத்தால், அது அகற்றப்படாமலோ அல்லது கிழிக்கப்படாமலோ இருப்பதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியருக்கு நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து, ஏழை மக்களுக்கு பிரதமரின் இலவச தானியங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 5 கிலோ உணவு தானியங்களுக்கான முழுச் செலவையும் மோடி அரசே ஏற்கிறது என்றும், இதனால் ரேஷன் கடைகளில் பிரதமர் மோடியின் பேனர் அல்லது போஸ்டர்கள் வைக்கப்படுவதில் உங்களுக்கு ஏதாவது ஆட்சேபனை உள்ளதா என்றும் நிதி மந்திரி அலுவலகம் சார்பில் டுவிட் செய்யப்பட்டது.

முன்னதாக பான்ஸ்வாடா பகுதிக்கு சென்ற மத்திய நிதி மந்திரியின் காரை மறித்த காங்கிரஸ் தொண்டர்கள் சிலர், விலைவாசி உயர்வு குறித்து எதிர்ப்பு தெரிவிக்க முயன்றனர். போலீசார் தலையிட்டு அந்த கும்பலை கலைத்தனர்.