Tamilசெய்திகள்

ரெயில்களில் மூத்த குடிமக்களுக்கான சலுகையை மீண்டும் வழங்க மத்திய அரசு முடிவு

ரெயில்களில் மூத்த குடிமக்களுக்கு 40 முதல் 50 சதவீதம் வரை கட்டண சலுகை வழங்கப்பட்டு வந்தது. கொரோனா தொற்றால் ரெயில்வே வருவாய் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்த சலுகை ரத்து செய்யப்பட்டு உள்ளது. இந்த சலுகையை மீண்டும் வழங்க ரெயில்வேத்துறை மறுத்து உள்ளது.

தற்போதைய நிலையில் மாற்றுத் திறனாளிகள், 11 வகையான நோயாளிகள், மாணவர்கள் உள்பட 4 வகை பயணிகளுக்கு மட்டுமே கட்டண சலுகை வழங்கப்படுகிறது. இந்நிலையில் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை ரத்தை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய அரசை நாடாளுமன்ற நிலைக்குழு அறிவுறுத்தி இருக்கிறது. பாஜக தலைவர் ராதாமோகன் சிங் தலைமையிலான இந்த குழு நடத்திய ஆய்வின் அடிப்படையில் மத்திய அரசுக்கு அறிக்கை அளித்துள்ளது.

அதில் கொரோனாவால் ஏற்பட்ட வருவாய் பாதிப்புகளில் இருந்து ரெயில்வே தற்போது மீண்டு வரும் நிலையில், பல்வேறு வகையான பயணிகளுக்கான நியாயமான கட்டண சலுகையை வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.

மூத்த குடிமக்களுக்கு கிடைத்த சலுகைகளில் குறைந்தபட்சம் படுக்கை வசதி மற்றும் 3-ம் வகுப்பு ஏ.சி.பெட்டிகளில் பயணிப்போருக்கு கட்டண சலுகை வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்படக்கூடிய மற்றும் உண்மையிலேயே சலுகை தேவைப்படும் மூத்த குடிமக்கள் மேற்படி வசதியைப் பெற முடியும் என்றும் அதில் குறிப்பிட்டுப்பட்டு உள்ளது.