Tamilசெய்திகள்

ரெயில்களில் டிக்கெட் பரிசோதனை முறை மாற்றம்

ரெயில்களில் உள்ள முன்பதிவு பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளிடம், டிக்கெட் பரிசோதகர்கள் தங்களிடமுள்ள காகிதத்தில் அச்சிடப்பட்ட பட்டியலை சரிபார்த்து பயணிகளின் டிக்கெட்டுகளை சோதனை செய்யும் நடைமுறை இதுவரை இருந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது அதில் மாற்றம் கொண்டு வரப்பட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த காகிதம் இல்லா பரிசோதனை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி டிக்கெட் பரிசோதனை முறை தற்போது கணினி மயமாக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தெற்கு ரெயில்வே இயக்கும் ரெயில்களில் பணியாற்றும் டிக்கெட் பரிசோதகர்களுக்கு கையடக்க டேப்ளட் வழங்கப்பட்டுள்ளது. அவற்றை பயன்படுத்தி இனி டிக்கெட் பரிசோதனையை மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக தெற்கு ரயில்வே 857 கையடக்க டேப்களை ஒதுக்கீடு செய்துள்ளது.

தெற்கு ரயில்வே இயக்கி வரும் சுமார் 185 ரயில்களில் இந்த முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வசதி மேலும் பல ரெயில்களில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிகிறது. இதன் மூலம் காலியாக உள்ள இருக்கைகள் உடனடியாக டிக்கெட் முன்பதிவு இணையதளத்திற்கு அனுப்பப்பட்டு, வழியில் உள்ள ரெயில் நிலையங்களில் காத்திருக்கும் பயணிகள் அவற்றை முன்பதிவு செய்து கொள்ள இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.