Tamilசெய்திகள்

ரெயிலில் திருட்டு போனால் அதற்கு ரெயிவே நிர்வாகம் பொறுப்பேற்காது – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர் சுரேந்தர் போலா என்ற தொழில் அதிபர். இவர் காசிவிஸ்வநாத் ரெயிலில் 2005-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27-ம் தேதியன்று டெல்லிக்கு பயணம் செய்தார். ரெயில் பயணத்தின்போது அவரது இடுப்பு பெல்ட்டின் பையில் வைத்திருந்த ரூ.1 லட்சம் பணம் திருட்டு போனது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், மறுநாள் ரெயில்வே போலீசில் புகார் செய்தார். மேலும் தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்திலும் ஒரு வழக்கு தொடுத்தார். அந்த வழக்கில் அவர், தனது ரெயில் பயணத்தின் போது இடுப்பு பெல்ட் ரூ.1 லட்சம் பணத்துடன் திருட்டு போய்விட்டதால் அந்த இழப்பை ரெயில்வே ஈடுசெய்ய வேண்டும் என கோரியிருந்தார்.

வழக்கை விசாரித்த தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் அவருக்கு ரெயில்வே ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ரெயில்வே மேல்முறையீடு செய்தது. இந்த மேல் முறையீட்டு வழக்கை நீதிபதிகள் விக்ரம்நாத், அசனுதீன் அமானுல்லா ஆகியோர் விசாரித்தனர்.

விசாரணை முடிவில், சுரேந்தர் போலாவுக்கு ரெயில்வே ரூ.1 லட்சம் இழப்பீடு தர வேண்டும் என தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் அளித்த தீர்ப்பை ரத்து செய்து தீர்ப்பளித்தனர். அந்தத் தீர்ப்பில், ரெயில் பயணத்தின்போது, தனது உடைமையை பயணி பாதுகாத்துக் கொள்ள முடியாமல் திருட்டு போனால், அதற்கு ரெயில்வே பொறுப்பு ஆகாது. பயணியர் தங்கள் உடைமைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளவில்லை எனில், அதற்கு ரெயில்வே நிர்வாகம் எப்படி பொறுப்பாகும்? ரெயில் பயணத்தில் திருட்டு போனால் அது ரெயில்வேயின் சேவை குறைபாடும் இல்லை என தெரிவித்துள்ளது.