Tamilசெய்திகள்

ரூ.500 செலவில் திருமணத்தை முடித்ஹ ஐ.ஏ.எஸ் ஜோதி!

வாழ்வில் முக்கிய நிகழ்வாக கருதப்படும் திருமணத்தை தடல்புடலாக பலரும் புகழ்ந்து பேசும்படி நடத்தி முடிப்பதே பலரின் கனவு. அம்பானி குடும்ப திருமணம்போல கோடிகளை கொட்டி செலவு செய்ய முடியாவிட்டாலும், தங்கள் தகுதிக்கு ஏற்ப கடனை வாங்கியாவது அதிகப்படியாக செலவு செய்து ஊரார் போற்றும்படி திருமணம் நடத்துவது பெரும்பாலானவர்களின் வழக்கம்.

ஆனால் திருமணத்துக்கு அதிக செலவு செய்து ஆடம்பரத்தை வெளிக்காட்டுவதைவிட, அளவாக செலவு செய்து வளமாக வாழ்ந்து காட்டுவதே சிறந்த குடும்பம் என்பதை உணர்த்தும் விதமாக 500 ரூபாயில் திருமணம் நடத்திக்காட்டியிருக்கிறது ஒரு ஐ.ஏ.எஸ். ஜோடி. அவர்கள் விரும்பினால் பல லட்சங்களை செலவு செய்து, ஏராளமானவர்களுக்கு அழைப்பு விடுத்து பலரும் மெச்சும்படியாக திருமணத்தை நடத்த முடியும். ஆனாலும் பலருக்கும் முன்னுதாரணமாக எளிமையாக திருமணத்தை முடித்து காட்டியிருக்கிறது அந்த ஜோடி.

இந்தியாவில் உயர்நிலை பதவிகளான ஐ.ஏ.எஸ். பதவியில் இருக்கும் சலோனி சிதானா மற்றும் ஆஷிஷ் வசிஷ்ட் தங்கள் திருமணத்தை எளிமையாக செய்ய விரும்பினர். அவர்கள் தங்கள் குடும்பத்தினரை திருமணம் பதிவு செய்யும் இடத்திற்கு அழைத்து வந்து, ரூ.500 பதிவு கட்டணம் மட்டும் செலுத்தி எளிமையாக திருமணம் நடத்தி முடித்தனர். மாலை மாற்றிக்கொண்டதுடன் திருமண சடங்குகள் முடிந்தன.

ஆஷிஷ் வசிஷ்ட் ராஜஸ்தானில் உள்ள அல்வாரைச் சேர்ந்தவர். சலோனி சிதானா பஞ்சாபின் ஜலாலாபாத்தைச் சேர்ந்தவர். மத்திய பிரதேசத்தில் பணிபுரியும் அவர்கள் அங்கேயே திருமணம் முடித்தனர். மேலும் திருமணத்திற்கு 2 நாட்கள் மட்டுமே விடுமுறை எடுத்த அவர்கள் மூன்றாம் நாளில் பணிக்கு திரும்பிவிட்டனர். இவர்களின் திருமணம் 2016-ல் நடந்தது. பிரபலமாக நடந்த அம்பானி குடும்பத்தின் திருமணத்தையொட்டி, இந்த ஜோடியின் எளிமையான திருமணம் பற்றிய தகவல் சமூக வலைதளத்தில் பரவி மீண்டும் வலம் வருகிறது.