Tamilசெய்திகள்

ரூ.1 லட்சம் கோடி அளவிற்கு கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி செய்ய முடிவு – அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்

கேரளா மாநிலம் கொச்சியில் கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சி ஆணையத்தில் ஆய்வு செய்த மத்திய வர்த்தகத்துறை மந்திரி பியூஷ் கோயல், பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி தற்போது 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவாக உள்ளது. 5 ஆண்டுகளுக்குள் அதை இரட்டிப்பாக்கி ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு ஏற்றுமதி செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது. மீன் பிடித்தலை அதிகரித்தல், தரம் மற்றும் வகைகளை உறுதி செய்தல் மற்றும் மீன்வளர்ச்சித் துறைக்கு தேவையான ஆதரவை வழங்குதல் மூலம் இந்த இலக்கை அடைய முடியும்.

ஐக்கிய அரபு எமிரேட், ஆஸ்திரேலியாவுடன் தடையில்லா ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்து, கனடாவுடன் இந்த ஒப்பந்தம் மேற்கொள்வது தொடர்பாக பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. ஜரோப்பிய யூனியனுடனான தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுக்கள் வரும் 17ம் தேதி தொடங்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.