Tamilசெய்திகள்

ராகுல் காந்தியின் பேச்சு பதிலடி கொடுத்த தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை

தமிழகத்தில் பா.ஜனதா ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் பேசினார். அவரது இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது.

அவருக்கு பதிலடி கொடுத்து தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

பாராளுமன்றத்தில் ராகுல்காந்தி ஏற்படுத்திய திடீர் கூச்சலை கேட்டு வழக்கம் போல் மகிழ்ச்சி அடைந்தோம். அவர் தனது ஏகபோக முரண்பாடான பேச்சில் தமிழ்நாட்டில் பா.ஜனதா ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது என்று குறிப்பிட்டார்.

மகத்துவமிக்க தமிழ் நாட்டின் மகனாக கூறுகிறேன். விரைவில் தமிழ்நாட்டிலும் என்ன நடக்கப்போகிறது என்பதை உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.

உங்களுடைய இந்த முரண்பாடான பேச்சுகளின் விளைவாக தமிழகத்தில் காங்கிரஸ் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளது. தி.மு.க.வில் இருந்து ஆக்சிஜன் சப்ளை செய்யப்படுகிறது.

பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையை ஏற்றுக்கொண்ட மக்களால் நாங்கள் புதுவை மாநிலத்தில் ஆட்சிக்கு வந்துள்ளோம். அதற்காக மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம். பா.ஜனதா வளர்ச்சியில் இது ஒரு மைல்கல். எங்கள் வெற்றிப்பயணத்தின் அடுத்த ஜங்சன் தமிழ்நாடுதான்.

வரலாற்றை ஒருபோதும் மறக்காதீர்கள். அமேதியில் என்ன நடந்தது என்பதை நினைத்து பாருங்கள். அதை மீண்டும் செய்தால் மீண்டும் அதேபோல் மக்களால் கண்டிக்கப்படுவீர்கள்.

நீங்கள் உருவாக்கப்போகும் அடுத்த செயற்கையான பிரச்சினைக்குள் நீங்கள் ஓடிப்போகும் வரை தற்போதைக்கு பை பை சார்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.