ரஷ்யா இக்கட்டான நிலையில் இருக்கும் போது அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் ஆலோசனை நடத்திய ஜெலன்ஸ்கி

உக்ரைன்- ரஷியா இடையே கடந்த ஒன்றரை வருடத்திற்கு மேலாக சண்டை நடைபெற்று வருகிறது. இன்னும் சண்டை முடிவுக்கு வரவில்லை. தற்போது உக்ரைன் எதிர்தாக்குதல் நடத்தி வருகிறது. இதன்மூலம் சில கிராமங்களை மீண்டும் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.

இதற்கிடையே வாக்னர் கூலிப்படை திடீரென ரஷியாவிற்கு எதிராக திரும்பியது. எவ்ஜெனி புரிகோசின் தலைமையிலான வாக்னர் கூலிப்படை ரஷியாவின் ரோஸ்டோவ்-ஆன்-டான் ராணுவ கட்டுப்பட்டு மையத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும், மாஸ்கோ நோக்கி முன்னோக்கி செல்ல இருப்பதாகவும் அறிவித்தது.

இதனால் ரஷியாவுக்கு இக்கட்டான நிலை ஏற்பட்டது. ஒரு பக்கம் உக்ரைனுக்கு எதிராக போரிட வேண்டும். மறுபுறம் துரோகியை ஒடுக்க வேண்டும். இதனால் புதின் வாக்னர் படை வீரர்களை கண்டதும் சுட உத்தரவிட்டார். இந்த நிலையில்தான் ரஷியாவின் மிகவும் நெருங்கிய நாடான பெலாரஸ் மத்தியஸ்தராக செயல்பட்டு, புரிகோசினிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது புரிகோசின் பெலாரஸ் செல்ல வேண்டும். வாக்னர் படை மீதான கிரிமினல் வழக்குகளை ரஷியா திரும்ப பெற வேண்டும் என ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதனால் வாக்னர் படை மாஸ்கோ நோக்கி செல்வதில் இருந்து பின்வாங்கியது.

இந்த பரபரப்பான சூழ்நிலை நடந்து கொண்டிருந்த வேலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இதுகுறித்து ஜெலன்ஸ்கி கூறுகையில் ”நான் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடன் பேசினேன். நேர்மறை மற்றும் உத்வேகம் அளிக்கும் உரையாடல் நடைபெற்றது.

உக்ரைன்- ரஷியா இடையிலான போர் மற்றும் தற்போது ரஷியாவில் நடைபெற்று வரும் சூழ்நிலை குறித்து விவாதித்தோம். சர்வதேச உத்தரவு நடைமுறைக்கு வரும்வரை, சர்வதேச நாடுகள் ரஷியாவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்” என்றார்.

மேலும், நீண்ட தூரம் சென்று தாக்கும் ஆயுதங்களை வழங்குவது குறித்து ஜெலன்ஸ்கி பைடன் உடன் ஆலோசனை நடத்தியதை உறுதிப்படுத்திய வெள்ளை மாளிகை, இது தனி விசயம் என்று தெரிவித்துள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news