ரஞ்சி கிரிக்கெட்டுக்கு ஜடேஜாவை அனுப்ப முடியாது – சவுரவ் கங்குலி அறிவிப்பு

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி வருகிற 9-ந்தேதி தொடங்குகிறது. இதில் சவுராஷ்டிரா – பெங்கால் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

புஜாரா மற்றும் ஜடேஜா ஆகியோர் சவுராஷ்டிரா அணிக்காக விளையாடக்கூடியவர்கள். சகா பெங்கால் அணிக்காக விளையாடக்கூடியவர். நியூசிலாந்து தொடர் முடிந்துள்ளதால் சவுராஷ்டிரா அணிக்காக புஜாரா மற்றும் ஜடேஜா ஆகியோர் விளையாட விரும்பினார்கள்.

ஆனால், தென்ஆப்பிரிக்கா அணி இந்தியா வந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடர் 12-ந்தேதி தொடங்குகிறது. புஜாரா ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடாததால் அவர் சவுராஷ்டிரா அணிக்காக விளையாடலாம். இதில் எந்த பிரச்சினையும் இல்லை.

ஆனால் ஜடேஜா ஒருநாள் அணியில் இடம் பிடித்துள்ளதால் அவரை ரஞ்சி இறுதி போட்டிக்கு அனுப்ப முடியாது என்று பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

பிசிசிஐ தலைவர் கங்குலிக்கு சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்கத் தலைவர் ஜெய்தேவ் ஷா ஜடேஜாவை ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டிக்கு விடுவிக்கும்படி கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சகாவும் டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடி வருவதால் பெங்கால் அணியில் இடம் பெற அவருக்கு சிக்கல் இல்லை.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news