Tamilசினிமா

ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற நடிகர் சரத்குமார்

மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 30-ம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இத்திரைப்படம் இதுவரை உலக அளவில் 350 கோடிக்கு மேல் வசூல் செய்து வருகிறது. இப்படத்தில் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமார் நடித்திருந்தார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்த்தபின் ரஜினிகாந்த், தொலைபேசியில் தொடர்பு கொண்டு சரத்குமாருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ரஜினி வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சரத்குமார், ரஜினிகாந்தை நேற்று நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பு தொடர்பாக நடிகர் சரத்குமார் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், அன்பு நண்பர் ரஜினிகாந்த் அவர்கள் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் “பெரிய பழுவேட்டரையர்” கதாபாத்திரம் ஏற்று நடித்த என்னை அலைபேசியில் அழைத்து ஆத்மார்த்தமாக பாராட்டியதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்றைய தினம் அவரை நேரில் சந்தித்ததில் இனிய தினமாக நாள் துவங்கியது. எனது பணிகள், மகள் வரலட்சுமியின் பணிகள், திரைத்துறை வளர்ச்சி மற்றும் பொதுவான கருத்துகளை பகிர்ந்து காபியுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட உரையாடலில் இருவருக்கும் இடையேயான நட்பினை எண்ணி நெகிழ்ந்தேன்’ என பதிவிட்டுள்ளார்.

பொன்னியின் செல்வனில் இடம்பெற்றுள்ள பெரிய பழுகுவேட்டையார் கதாப்பாத்திரத்தில் ரஜினி நடிக்க விருப்பம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.