Tamilசினிமா

யோகி பாபுவை ஹீரோவாக வைத்து ஆர்.கண்ணன் இயக்கும் ‘பெரியாண்டவர்’

2008-இல் வெளியான ஜெயம்கொண்டான் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் ஆர்.கண்ணன். இப்படத்திற்கு பிறகு கண்டேன் காதலை, சேட்டை, இவன் தந்திரன், பிஸ்கோத் உள்ளிட்ட பல படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வந்தார். தற்போது, மலையாளத்தில் வெற்றிபெற்ற கிரேட் இந்தியன் கிச்சன் படத்தை தமிழில் ஐஸ்வர்யா ராஜேஷை கதாநாயகியாக வைத்து இயக்கியுள்ளார். மிர்ச்சி சிவா, யோகி பாபு, பிரியா ஆனந்த் நடிக்கும் ‘காசேதான் கடவுளடா’ படத்தையும் இயக்கி முடித்துள்ளார்.

இந்நிலையில் ஆர்.கண்ணன் இயக்கவிருக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் யோகி பாபு கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு ‘பெரியாண்டவர்’ என்ற பெயரிடப்பட்டுள்ளது. சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் உருவாகவுள்ள இப்படத்தில் சிவன் வேடத்தில் யோகிபாபு நடிக்கவுள்ளார். இப்படம் வசனத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதை என்பதால் கபிலன் வைரமுத்து இதில் பாடல்கள் எழுதி வசனகர்த்தாவாக ஆர்.கண்ணனுடன் இணைகிறார். இதற்காக சென்னையில் செட் அமைக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.