Tamilவிளையாட்டு

யூரோ கோப்பை கால்பந்து – டென்மார்க், இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேற்றம்

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் அஜர்பைஜானில் உள்ள பாகு நகரில் நேற்று நடந்த 3-வது காலிறுதியில் டென்மார்க்- செக் குடியரசு அணிகள் சந்தித்தன.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் டென்மார்க் அணி 2 கோல்கள் போட்டது. அந்த அணியின் தாமஸ் டெலானி 5-வது நிமிடத்தில் தலையால் முட்டி கோலடித்தார். 42-வது நிமிடத்தில் சக வீரர் மாலே தட்டிக்கொடுத்த பந்தை கேஸ்பர் டோல்பெர்க் கோலாக்கினார்.

பிற்பாதியில் செக் குடியரசு வீரர் பாட்ரிக் சீக் 49-வது நிமிடத்தில் கோல் அடித்தார். நடப்பு தொடரில் அவரது 5-வது கோல் இதுவாகும். மேலும் ஒரு கோல் போட்டு ஆட்டத்தை சமனுக்கு கொண்டு வர முனைப்பு காட்டிய செக் குடியரசின் போராட்டத்துக்கு பலன் கிட்டவில்லை.

இறுதியில், டென்மார்க் அணி 2-1 என்ற கோல் கணக்கில் செக் குடியரசை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது.

இன்று அதிகாலை நடந்த மற்றொரு போட்டியில் இங்கிலாந்து, உக்ரைன் அணிகள் மோதின.

தொடக்கத்தில் இருந்தே இங்கிலாந்து வீரர்கள் சிறப்பாக ஆடினர். முதல் பாதி முடிவில் இங்கிலாந்து 1-0 என முன்னிலை வகித்தது.

இரண்டாவது போட்டியில் அதிரடியாக ஆடிய இங்கிலாந்து மேலும் 3 கோல்கள் அடித்து அசத்தியது. உக்ரைன் அணியினரால் பதிலுக்கு ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.

இறுதியில், இங்கிலாந்து 4-0 என்ற கோல் கணக்கில் உக்ரைனை வீழ்த்தி அரையிறுதியில் நுழைந்துள்ளது.