Tamilசினிமா

யுவராஜா இயக்கத்தில் உருவாகும் குழந்தைகளுக்கான படம் ‘கே.கே’

கோடை விடுமுறை தொடங்கியிருக்கும் நிலையில் சிறுவர்களுக்கான திரைப்படங்களின் வருகை அதிகரித்தாலும் அவை அனைத்தும் ஹாலிவுட் படங்களாக மட்டுமே இருக்க, நம்ம கோலிவுட்டிலும் அத்தகைய குழந்தைகளுக்கான ஒரு படம் உருவாகி வருகிறது.

‘ரெட்டச்சுழி’, ‘சாட்டை’ போன்ற திரைப்படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்த யுவராஜா, ‘கெளுத்தி’ என்ற திரைப்படத்தை இயக்கி கதாநாயகனாக நடித்திருக்கிறார். அப்படம் திரைக்கு வர தயாராக இருக்கும் நிலையில், அடுத்ததாக  குழந்தைகளின் வாழ்வியலை மையமாக வைத்து ஒரு படம் இயக்கி வருகிறார்.

கலர் காத்தாடி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு ‘கே.கே’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் முதல் பாடலை இம்மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இயக்குநர் யுவராஜா எழுத, ஜித்தின் கே.ரோஷன் இசையமைப்பில் விஜய் டிவி சூப்பர் சிங்கர் சாம்பியன் ரிஹானா மற்றும் சர்வேஷ்  ஆகியோர் பாடியுள்ளனர்.

இந்த திரைப்படத்தில் பேபி சஞ்சனா மற்றும் மிதுன் ஈஸ்வர் குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகமாக முக்கிய கதாபாத்திரங்களில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க உள்ளனர்.

பாலா மற்றும் மயில் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சசிதக்‌ஷ்யா படத்தொகுப்பு செய்கிறார்.

உதயநிதி நடித்த ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படத்தில் இடம்பெற்ற “செவகாட்டு சீமையிலே” பாடலை பாடி, தெருக்கூத்து கலைஞராக நடித்த பின்னணி பாடகர் குரு, ‘கே.கே’ படத்தின் கிளைமாக்ஸ் பாடலை பாடியுள்ளார்.