Tamilசெய்திகள்

மோசடி வழக்கில் இருந்து தப்பிக்க கடத்தல் நாடகம் ஆடிய பெண் கைது

திருப்பூர் மாவட்டம் பல்லடம் வடுகபாளையத்தை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி பிரவீனா. சேகர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். பிரவீனா பல்லடத்தில் அழகு நிலையம் நடத்திவந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரவீனாவின் தாய் பிலோமீனாள் பல்லடம் போலீசில் புகார் அளித்தார். அதில் தனது மகளை 2 நாட்களாக காணவில்லை. அவரை கண்டுபிடித்து தருமாறு கூறியிருந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரவீனாவை தேடி வந்தனர்.

போலீசார் தேடி வந்த வேளையில் பிரவீனா பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்தது. அந்த வீடியோ பதிவில், எனது அழகு நிலையத்திற்கு வந்த பல்லடம் வேலப்ப கவுண்டன் பாளையத்தை சேர்ந்த சிவக்குமார் (38) என்பவர் டெக்ஸ்டைல் தொழில் செய்யலாம் என சொல்லி தனது பெயரில் உள்ள வீட்டு பத்திரத்தை வாங்கி வங்கியில் அடமானம் வைத்து ரூ.75 லட்சம் கடன் வாங்கினார்.

வீட்டு பத்திரம் ஏலத்திற்கு வந்த நிலையில் பணத்தை திருப்பி கேட்டபோது தொழில் விஷயமாக வெளியூர் அழைத்து சென்று திருச்சி பகுதியில் தன்னை அடைத்து வைத்து சில பத்திரங்களில் கையெழுத்து பெற்று கொண்டதாக திடுக்கிடும் தகவலை கூறியிருந்தார். மேலும் தனது தாய், தந்தைக்கு அவப்பெயரையும் ஏற்படுத்தி விட்டனர். என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள். அவன் தினமும் என்னை சித்ரவதை செய்கிறான் என கண்ணீர் மல்க கூறியிருந்தார்.

இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ பல்லடம் போலீசாருக்கும் கிடைத்தது. வீடியோவில் இருந்த ஆதாரங்களை திரட்டி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் வீடியோவில் பிரவீனா திருச்சியில் இருப்பதாக கூறியதால் அங்கும் தனிப்படை விரைந்தது.

தொடர்ந்து அவரை தேடி வந்த நிலையில், பிரவீனா ஈரோட்டில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டில் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில் போலீசார் ஈரோட்டுக்கு சென்று பிரவீனா இருப்பதாக கூறிய வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனென்றால் பிரவீனா வீடியோவில் தன்னை கடத்தியதாக கூறிய சிவக்குமாரும், அவரும் ஒன்றாக அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். இதனால் இருவரும் சேர்ந்து வேறு செயலில் ஈடுபட்டு இருப்பதை தெரிந்து கொண்ட போலீசார் அவர்களை பல்லடம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

அங்கு வைத்து விசாரணை நடத்தியதில் 2 பேரும் கணவன், மனைவி போல நடித்து கோவையை சேர்ந்த தொழில் அதிபரிடம் மோசடியில் ஈடுபட்ட திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது. போலீசாரின் தொடர் விசாரணையில், பிரவீனாவுக்கும், சிவக்குமாருக்கும் பழக்கம் இருந்துள்ளது. இவர்களுக்கு கடந்த 2018-ம் ஆண்டு கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த தொழில் அதிபரான குமரேசன் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. அப்போது பிரவீனா, சிவக்குமார் மற்றும் அவரது நண்பர் தமிழரசு ஆகியோர் குமரேசனிடம், உங்களை தொழிலில் பங்குதாரராக சேர்த்து கொள்வதாகவும், வங்கியில் கடன் பெற்று தருவதாகவும் கூறி உள்ளனர்.

இதனை குமரேசன் உண்மை என நம்பி, தனது சொத்து ஆவணங்களை கொடுத்தார். அதனை ஈரோடு பகுதியிலுள்ள அரசு வங்கியில் வைத்து ரூ.2 கோடி கடன் பெற்றனர். ஆனால் அதில் குமரசேனுக்கு எந்தவித பங்கும் கொடுக்கவில்லை. டெக்ஸ்டைல்ஸ் தொழில் எதுவும் செய்யவில்லை. இதனால் பணத்தை திருப்பி கொடுக்கும்படி தொடர்ந்து குமரேசன் கேட்டு வந்தார். ஆனால் அவர்கள் எந்தவித பதிலும் கூறாமல் இருந்து வந்துள்ளனர்.
இதற்கிடையே கடந்த மார்ச் மாதம் வங்கியில் இருந்து கடன் பெற்ற தொகைக்கு அசலும், வட்டியும் கட்டச்சொல்லி குமரேசனுக்கு அறிவிப்பு நோட்டீஸ் வந்துள்ளது. இதையடுத்து குமரேசன் மீண்டும் சிவக்குமார், பிரவீனா ஆகியோரை தொடர்பு கொண்டபோது அவர்கள் முறையாக பதில் அளிக்கவில்லை. இதையடுத்து அவர்கள் மீது குமரேசன் பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையே சிவக்குமார், பிரவீனாவுக்கு தெரியாமலேயே அவரது சொத்து பத்திரங்களையும் வைத்து கடன் பெற முயன்றது தெரிய வந்தது. இதனால் இந்த வழக்கில் இருந்தும், சிவக்குமாரிடம் இருந்து தப்பிப்பதற்காக பிரவீனா யோசித்துள்ளார். அப்போது தான் அவருக்கு தன்னை சிவக்குமார் கடத்தி விட்டதாக கூறினால் நாம் இதில் இருந்து தப்பித்து விடலாம் என நினைத்தார்.

அதன்படி பிரவீனா, தன்னை சிவக்குமார் கடத்திவைத்து சித்ரவதை செய்வதாக நாடகமாடி சமூக வலைதளங்களில் வீடியோவை பரப்பியதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பிரவீனா மற்றும் சிவக்குமாரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள தமிழரசுவை தேடி வருகின்றனர்.