Tamilசெய்திகள்

மைக்ரோ சிப் பொருத்தப்பட்ட மோதிரத்துடன் வலம் வரும் சந்திரபாபு நாயுடு!

தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு எப்போதும் மஞ்சள் நிற சட்டை, வெள்ளை நிற பேண்ட், பையில் ஒரு பேனா என மிகவும் எளிமையாக காட்சியளிக்க கூடியவர். சமீபகாலமாக அவருடைய இடது கை ஆள்காட்டி விரலில் மோதிரம் போன்ற ஒரு பொருள் காணப்படுகிறது.

தேர்தலில் வெற்றி பெறவும், ஆட்சியில் அமருவதற்காக ஜோதிடர்கள் கூறிய அறிவுரைப்படி அவர் மோதிரம் அணிந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மதனபள்ளியில் நடந்த தெலுங்கு தேசம் கட்சியின் மாநாட்டில் கலந்து கொண்டு சந்திரபாபு நாயுடு பேசியதாவது:-

நான் கைவிரலில் அணிந்துள்ளது மோதிரம் அல்ல. என் உடல் நிலையை தொடர்ந்து கண்காணிக்கும் ஹெல்த் மானிட்டர்.

இந்த கருவியானது நான் சாப்பிடும் நேரம் மற்றும் எத்தனை மணி நேரம் தூங்கினேன், எவ்வளவு தூரம் நடந்தேன், எவ்வளவு நேரம் ஓய்வெடுத்தேன் என்பது குறித்த என்னுடைய நடவடிக்கைகள் மட்டுமின்றி என் உடலில் சர்க்கரை அளவு, எவ்வளவு ரத்த அழுத்தம் எப்படி இருக்கிறது என்பது உள்ளிட்ட என் உடல்நிலை தொடர்பான தகவல்கள் எல்லாவற்றையும் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி கொண்டே இருக்கும்.

அவற்றை என் மனைவி புவனேஸ்வரி கண்காணித்து தேவையான ஆலோசனைகளை அவ்வப்போது செல்போன் மூலம் எனக்கு தெரிவிப்பார். இதற்காக அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மைக்ரோ சிப் இந்த கருவியில் பொருத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும், தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் அனைவரும் தங்கள் உடல் நிலையை நன்கு கவனித்து கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.