Tamilசெய்திகள்

மேற்கு வங்காள முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா காலமானார் – மம்தா பானர்ஜி இரங்கல்

மேற்கு வங்காளத்தின் முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா கொல்கத்தாவில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை காலமானார். 80 வயதாகும் புத்ததேவ் பட்டாச்சார்யா கடந்தாண்டு உடல்நல பிரச்சனையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நுரையீரல் பாதிப்புகள் இருப்பதால் சுவாசிப்பதில் பிரச்சனை ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வீடு திரும்பினார்.

நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோயால் அவதிப்பட்டு வந்த புத்ததேவ் பட்டாச்சார்யா அரசியல் நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல் வீட்டிலேயே இருந்தார். தற்போது வயதுமூப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புத்ததேவ் பட்டாச்சார்யா 2000 முதல் 2011-ம் ஆண்டு வரை 11 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்துள்ளார். கொல்கத்தாவில் உள்ள பிரசிடென்சி கல்லூரியின் முன்னாள் மாணவரான பட்டாச்சார்யா முழுநேர அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பு பள்ளி ஆசிரியராக இருந்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராகவும், பிறகு அமைச்சராகவும் பணியாற்றிய அவர், 2000 ஆம் ஆண்டு மேற்குவங்க துணை முதல்வராக பதவியேற்றார். முதலமைச்சராக இருந்த அவர், 2001 மற்றும் 2006ல் சட்டமன்றத் தேர்தல்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற காரணமாக இருந்தார்.

புத்ததேவ் பட்டாச்சார்யா மரணத்திற்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பேனர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது பதிவில், “முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவின் திடீர் மறைவு அதிர்ச்சியையும் வருத்தமும் அளிக்கிறது. பல ஆண்டுகளாக எனக்கு அவரை தெரியும். கடந்த சில ஆண்டுகளாக அவர் உடல்நிலை சரியில்லாமல் வீட்டிலேயே ஓய்வெடுத்தபோது சில முறை அவரைச் சந்தித்தேன்.

இந்த துயரமான நேரத்தில் அவரது மனைவி மற்றும் மகனுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். சிபிஐ(எம்) கட்சி உறுப்பினர்களுக்கும் அவரைப் பின்பற்றுபவர்கள் அனைவருக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரது இறுதிப் பயணம் மற்றும் சடங்குகளின் போது அவருக்கு முழு அரசு மரியாதை செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்.