Tamilசெய்திகள்

மேக வெடிப்பால் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடங்கியது

ஜம்மு மற்றும் காஷ்மீரில் அமர்நாத் புனித யாத்திரைக்கு பக்தர்கள் செல்லும் குகை அருகே உள்ள பகுதியில் கடந்த வெள்ளி கிழமை மாலை திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பெருமழை கொட்டியது.
மேகவெடிப்பு ஏற்பட்டதில் சிக்கி 16 பேர் உயிரிழந்து உள்ளனர். 45 பேர் காயமடைந்து உள்ளனர். இதனை தொடர்ந்து, காயமடைந்த நபர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். படுகாயமடைந்த நபர்கள் ஸ்ரீநகருக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மீட்பு பணிகள் நடந்த நிலையில் அமர்யாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. புனித பயணம் மேற்கொள்ளும் பக்தர்கள் முகாம்களிலேயே தங்கியிருக்க அறிவுறுத்தப்பட்டனர். அமர்நாத் குகை பகுதியில் மேகவெடிப்பு ஏற்பட்ட பகுதியருகே, இந்தோ-திபெத்திய எல்லை போலீசார், தேசிய மற்றும் மாநில பேரிடர் பொறுப்பு படையினர் உள்ளிட்ட பல குழுக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டன.

பட்டான் மற்றும் ஷரிபாபாத் பகுதியை சேர்ந்த தலா இரு மோப்ப நாய் படைகளும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டன. இதேபோன்று, காஷ்மீரின் சுகாதார சேவை இயக்ககம், ஒப்பந்த அடிப்படையிலான பணியாளர்கள் உள்பட அனைவரின் விடுமுறையையும் ரத்து செய்தது. அதனுடன், அவர்களை உடனடியாக பணிக்கு வரும்படியும் உத்தரவிட்டு சுற்றறிக்கை வெளியிட்டது.

இந்நிலையில், காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் தத்ரி நகரில் குந்தி வனத்தின் மலைபிரதேச பகுதியில் கடந்த சனிக்கிழமை அதிகாலை 4 மணி அளவில் மீண்டுமொரு மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால், அந்த பகுதியில் பெருமழை கொட்டியது. இதில், நெடுஞ்சாலையில் ஏற்பட்ட சேற்றில் சில வாகனங்கள் சிக்கி கொண்டன. கார், ஜீப் உள்ளிட்டவற்றின் சக்கரங்கள் மண்ணில் புதையுண்டன. இதனை அடுத்து, வாகன போக்குவரத்தில் சிறிது நேரம் பாதிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, பொக்லைன் இயந்திரம் கொண்டு வரப்பட்டு சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்பின்னர் போக்குவரத்து சீர் செய்யப்பட்டு வாகனங்கள் இயங்கப்பட்டன.

இதுவரை நடந்த மீட்பு பணியில் 16 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. அவர்களது உடல்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளன. அமர்நாத் புனித யாத்திரையில் மேகவெடிப்பில் காயமடைந்து மீட்கப்பட்ட நபர்களில் ஒரு சிலர் ஸ்ரீநகரில் உள்ள ஷெர்-இ-காஷ்மீர் மருத்துவ அறிவியல் மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்ஹா நேரில் சென்று சந்தித்து அவர்களது உடல்நலம் பற்றி கேட்டறிந்து உள்ளார். இதன்பின் அவர்களுக்கு ஆறுதலும் கூறியுள்ளார்.

அமர்நாத் புனித யாத்திரை மேகவெடிப்பு மற்றும் பெருமழை ஆகியவற்றால் தற்காலிக ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்று காலை மீண்டும் தொடங்கியுள்ளது. இதனையடுத்து பக்தர்கள் அடங்கிய குழு ஒன்று ஜம்முவில் உள்ள முகாமில் இருந்து புறப்பட்டு தரிசனத்திற்கு சென்றுள்ளனர். இதுபற்றி பக்தர்கள் கூறும்போது, எங்களுக்குள் சக்தி நிறைந்துள்ளது. பாபாவை தரிசிக்காமல் நாங்கள் திரும்பி செல்லமாட்டோம். போலே பாபா மீது நாங்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளோம். அவரது தரிசனத்திற்காக காத்திருக்கிறோம்.

அமர்நாத் புனித யாத்திரை மீண்டும் தொடங்கியதற்காக நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். நாங்கள் பாதுகாப்புடன் பயணிக்க ஏதுவாக சி.ஆர்.பி.எப். மற்றும் பிற பாதுகாப்பு படையினர் எங்களுக்கு வழிகாட்டி வருகின்றனர் என கூறியுள்ளனர். இதற்கு முன், நுன்வான் பகல்காம் பகுதியில் இருந்து அமர்நாத் புனித யாத்திரை இன்று தொடங்கும் என ஸ்ரீ அமர்நாத்ஜி கோவில் வாரியம் தெரிவித்து இருந்தது.

பக்தர்கள் பால்தல் முகாமில் இருந்தும் புறப்பட்டு செல்ல காத்திருக்கின்றனர். இதனை முன்னிட்டு காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்ஹா பகல்காமில் உள்ள பக்தர்களை நேற்று நேரில் சென்று சந்தித்து பேசினார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புனித யாத்திரை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பயணவழிகளை சீர்செய்து உள்ளோம். பக்தர்கள் வரவேண்டும். அவர்களுக்கு அனைத்து வசதிகளையும் நாங்கள் செய்து தருவோம் என சின்ஹா உறுதி கூறினார்.