Tamilசெய்திகள்

மெக்சிகோ நாட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சுட்டுக் கொலை

மெக்சிகோ நாட்டின் குவானாஜுவாடோ மாநிலத்தில் உள்ள சிலாவ் கிராமப்புற நகராட்சி பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த நிலையில் இறந்து கிடந்தனர். அவர்களில் நான்கு பேர் ஆண்கள், இரண்டு பேர் பெண்கள்.

இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்த கொடூர செயலை செய்வர்கள் குறித்த ஆதாரங்கள்  அந்த பகுதியில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. கடந்த நான்கு மாதங்களில் சிலாவ் கிராமப்புற நகராட்சியில் நடத்தப்பட்ட ஐந்தாவது தாக்குதல் இது என்று அப்பகுதி அரசு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மெக்சிகோவின் மத்திய மாநிலமான குவானாஜுவாடோவில் இரண்டு போதைப்பொருள் கடத்தல் குழுக்கள் இடையே ஏற்பட்ட தகராறு வன்முறையாக மாறி உள்ளது. இந்த குழுக்களை சேர்ந்தவர்கள் இந்த குற்றத்தில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

கடந்த 2006 ஆண்டில் இருந்து மெக்சிகோவில் போதை பொருள் எதிர்ப்பு நடவடிக்கையில் அந்நாட்டு இராணுவம் ஈடுபட்டு வருகிறது. இதன் அடிப்படையில் மெக்ஸிகோவில் 3, 40,000 க்கும் அதிகமான கொலைகள் பதிவாகி உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.