Tamilசெய்திகள்

முழு கொள்ளளவை எட்டிய செம்பரம்பாக்கம் ஏரி – உபரி நீர் திறக்க வாய்ப்பு

சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவு 3645 மி.கனஅடி ஆகும். தற்போது பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர் வந்து கொண்டு இருப்பதால், பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகிறது. இதையடுத்து செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. மொத்த கொள்ளளவில் தற்போது 3475 மி.கன அடி தண்ணீர் உள்ளது. இது மொத்த நீர் இருப்பில 95 சதவீதம் ஆகும்.

இந்த நிலையில் நேற்று இரவு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பூண்டி ஏரியில் இருந்து வரும் தண்ணீரோடு, மழை நீரும் சேர்ந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டி உள்ளது.

இன்று காலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரிக்கு 1,700 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. ஏரியில் 23.36 அடிக்கு (மொத்த உயரம் 24 அடி) தண்ணீர் உள்ளது. வழக்கமாக செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் இருப்பு 23 அடியை தாண்டினால் உபரி நீர் திறக்கப்படுவது வழக்கம். தற்போது ஏரியில் 23 அடியை தாண்டி தண்ணீர் உள்ளதால் உபரி நீர் திறக்கப்படலாம் என்று தெரிகிறது.

மேலும் பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் அனுப்புவதையும் நிறுத்த முடிவு செய்து உள்ளனர். செம்பரப்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் தண்ணீர் இருப்பை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். கோடை காலத்தில் செம்பரம்பாக்கம் ஏரி முழுவதும் நிரம்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.