Tamilசெய்திகள்

முல்லை பெரியாறு அணை தொடர்பாக நீதிமன்ற உத்தரவுக்கு காத்திருக்கிறோம் – அமைச்சர் துரைமுருகன் பேட்டி

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நெல்லை மாவட்டம் வந்துள்ளார். நேற்று 10 மாவட்ட அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் நடந்து வரும் தமிழகத்தின் முதல் நதிநீர் இணைப்பு திட்டமான தாமிரபரணி-நம்பியாறு-கருமேனியாறு இணைப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து இன்று ஆய்வு மேற்கொண்டார். அதன் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டம் திடீயூர் பகுதியில் நடந்து வரும் நதிநீர் இணைப்பு திட்டப் பணிகள் மற்றும் பச்சையாறு அணைக்கட்டு பகுதிகளை ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நீண்ட ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கபட்ட பணி தாமிரபரணி ஆறு-நம்பியாறு-கருமேனியாறு இணைப்பு திட்டம். நான் இதற்கு முன்னர் அமைச்சராக இருந்தபோது ஆரம்பித்ததை நானே திறக்க வேண்டும் என விட்டுவிட்டார்கள். நெல்லை மாவட்டத்தில் நடந்து வரும் நதிநீர் இணைப்பு திட்டத்தின் முதல் 2 பகுதிகள் 100 சதவீதம் முடிந்துள்ளது. 3-ம் பகுதி 99 சதவீதம் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. 4-ம் பகுதி 58 சதவீதம் பணி நிறைவு செய்யப்பட்டுள்ளது. வருகிற அக்டோபர் மாதத்திற்குள் நதிநீர் இணைப்பு திட்டம் பெருமளவு நிறைவு செய்யப்பட்டு பயன்பாட்டுக்கு வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

தாமிரபரணி நதி நீர் இணைப்பு திட்டம் மொத்தமாக மார்ச் 2023-ல் நிறைவு பெற்று பயன்பாட்டுக்கு வரும். முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக எதுவும் இனி பேச மாட்டோம். முல்லைப் பெரியாறு தொடர்பான பேச்சுவார்த்தை முடிந்து விட்டது. இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்கிறோம்.

நெல்லை மாவட்டத்தில் கல்குவாரிகள் மூடி இருப்பதால் பல தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறிய அளவிலான அபராதம் விதித்து கல்குவாரிகளை திறப்பதற்காக மாவட்ட கலெக்டரிடம் அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அவர்கள் அதற்கு முன் நீதிமன்றத்தை நாடினார்கள்.

கல்குவாரிகளில் தவறு செய்திருந்தாலும் தொழிலாளர்களின் நிலையை எண்ணி அவர்களை மன்னிப்பதற்கு தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். அப்போது நிருபர்கள், அண்ணாமலை தி.மு.க. அமைச்சர்கள் குறித்து பேசி வருவது குறித்து கேட்டனர். அதற்கு அமைச்சர் துரைமுருகன் சிரிப்பை பதிலாக தெரிவித்து சென்றார்.