Tamilசெய்திகள்

மும்பை, டெல்லியில் உள்ள டிவிட்டர் அலுவலகங்கள் மூடல் – எலான் மஸ்க் அதிரடி

உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டரை கையகப்படுத்தினார். பின்னர், அதில் பணிபுரிந்த முன்னணி நிர்வாகிகளை எலான் மஸ்க் அதிரடியாக வேலையை விட்டு நீக்கினார். டுவிட்டர் தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால் உள்பட 4 முக்கிய உயர் அதிகாரிகளையும், பணியாளர்கள் சுமார் 7 ஆயிரத்து 500 பேரை அதிரடியாக பணிநீக்கம் செய்தார். இவரது அதிரடி நடவடிக்கைகள் சர்ச்சைக்குள்ளானது.

இந்த நிலையில், இந்தியாவில் செயல்பட்டு வந்த 3 டுவிட்டர் அலுவலகங்களில் டெல்லி, மும்பையில் உள்ள தனது அலுவலகங்களை டுவிட்டர் நிறுவனம் மூடியுள்ளது. பெங்களூரு அலுவலகம் மட்டும் தொடர்ந்து செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூடப்பட்டுள்ள 2 அலுவலகங்களில் பணியாற்றியவர்கள் வீட்டில் இருந்து வேலை செய்ய எலான் மஸ்க் அறிவுறுத்தியுள்ளார். செலவை குறைக்கும் நடவடிக்கையாக 3 அலுவலகங்களில் இரண்டை மூடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.