மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் அணியில் இருந்து பொல்லார்ட் உள்ளிட்ட 5 வீரர்கள் விடுவிப்பு

ஐபிஎல் ஏலத்திற்காக மும்பை அணியில் இருந்து முன்னணி வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து இந்திய அணி வெளியேறியதால் ரசிகர்கள் அனைவரின் கவனமும் தற்போது ஐபிஎல் தொடர் மீது திரும்பியுள்ளது.

பிசிசிஐ-ம் அதற்கேற்ற பணிகளை செய்து வருகின்றன். அதாவது 2023-ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தின் கடைசி கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி வரும் டிசம்பர் 23ம் தேதியன்று கொச்சியில் மினி ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த மினி ஏலத்திற்காக ஒவ்வொரு அணியும் தங்களுக்கு விருப்பமில்லாத வீரர்களை விடுவிக்கும். அந்தவகையில் வரும் நவம்பர் 15ம் தேதிக்குள் அனைத்து அணிகளும் விடுவிக்கவுள்ள வீரர்கள் பட்டியலை சமர்பிக்க வேண்டும் என கூறியிருந்தது. எனவே தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி தனது பட்டியலை இறுதி செய்து அனுப்பிவிட்டது.

மும்பை அணியில் மொத்தம் 10 வீரர்கள் தக்கவைக்கப்பட்டுள்ளனர். 5 வீரர்கள் மினி ஏலத்தில் விடுவிக்கப்பட்டனர். இதில் மும்பை அணியின் மிக முக்கிய வீரரான பொல்லார்ட்-ம் ஒருவர் என்பது தான் தற்போது அதிர்ச்சி தகவல். 2010-ம் ஆண்டு முதல் அந்த அணிக்காக விளையாடி வரும் பொல்லார்ட் தற்போது திடீரென நீக்கப்பட்டிருக்கிறார்.

5 முறை சாம்பியனான மும்பை அணி கடந்த சீசனில் 10-வது இடத்தை பிடித்து மோசமாக வெளியேறியது. இதில் பொல்லார்ட் 11 போட்டிகளில் விளையாடி வெறும் 144 ரன்களை மட்டுமே அடித்தார். மேலும் தனது கரியரில் மிக மோசமான சராசரியை ( 14.40 ) வைத்திருந்தார். பந்துவீச்சிலும் பொல்லார்ட் 6 இன்னிங்ஸ்களில் 4 விக்கெட்களை கைப்பற்றியிருந்தார். 35 வயதாகும் அவரை பெரிய தொகைக்கு வைத்திருக்க வேண்டாம் என முடிவெடுத்துள்ளனர்.

பொல்லார்ட் மட்டுமின்றி மேலும் 4 நட்சத்திர வீரர்களான ஃபெபியன் ஆலன், டைமல் மில்ஸ், மயங்க் மார்காண்டே, ஹிர்திக் சௌக்கின் ஆகிய 4 பேரும் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். ரோகித் சர்மா, பும்ரா உள்ளிட்ட 10 பேர் தக்கவைக்கப்பட்டிருக்கின்றனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools