Tamilசெய்திகள்

முதியவரின் கிட்னியில் 3 ஆயிரம் கற்கள் – டாக்டர்கள் அதிர்ச்சி

ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள மதனப்பள்ளி பகுதியை சேர்ந்த 75 வயது முதியவர் ஒருவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. அவரை அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் உறவினர்கள் சேர்த்தனர்.

முதியவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருடைய கிட்னியில் கற்கள் இருப்பதை அறிந்தனர். எனவே அவருக்கு அறுவை சிகிச்சை இல்லாமல் கீ ஹோல் முறைப்படி ( சிறிய ஓட்டை போட்டு அதன்மூலம் கற்களை எடுப்பது) சிகிச்சை அளித்து கற்களை டாக்டர்கள் வெளியில் எடுத்தனர்.

வெளியில் எடுக்கப்பட்ட கற்களை எண்ணி பார்த்தபோது அந்த எண்ணிக்கை ஒன்று, பத்து, நூறு, ஆயிரம் என அதிகரித்து 3 ஆயிரத்தில் முடிவடைந்தது. இதனால் டாக்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். 3 ஆயிரம் கற்களையும் முதியவர் ஒருவரின் கிட்னியில் இருந்து அறுவை சிகிச்சை இல்லாமல் நவீன சிகிச்சை முறையில் வெளியில் எடுத்த டாக்டர்களுக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

அந்த முதியவர் இப்போது உடல் நலத்துடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.