Tamilசெய்திகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தபால் அட்டையில் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து – அண்ணாமலை அறிவிப்பு

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தொடர்ந்து பக்தர்களின் மனதையும், மதத்தையும் புண்படுத்தி வரும் தி.மு.க. ஆட்சியில், விநாயகர் சிலைகள் வைக்க தடை விதித்தும், விநாயகர் சிலைகள் தயாரிக்கும் ஏழை குயவர்களை கைது செய்தும், குறிப்பாக இந்துக்கள் மத்தியில் ஒரு அச்சத்தையும் படபடப்பையும் ஏற்படுத்தி வரும் அரசின் இந்த அராஜக நடவடிக்கைகளை பா.ஜ.க. வன்மையாக கண்டிக்கிறது.

விநாயகரை வழிபட தடை விதிப்பது தனிமனித அத்துமீறல் இல்லையா?

புதுச்சேரி, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்பட அண்டை மாநிலங்களில் எல்லாம் விநாயகர் வழிபாட்டுக்கு எந்த தடையும் இல்லாதபோது, தமிழகத்தில் கட்டுப்பாடுகள் கூட விதிக்காமல், முழுமையான தடை விதிக்க காரணம் என்ன?

தமிழக மக்களுக்கும், பா.ஜ.க. தொண்டர்களுக்கும் பணிவான வேண்டுகோள், மாற்றுமத பண்டிகைகளுக்கு மனமார வாழ்த்து சொல்லும் நம் மாநில முதல்-அமைச்சருக்கு விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளை நாம் அனைவரும் ஒரு தபால் அட்டையில் எழுதி அனுப்பி வைப்போம். பா.ஜ.க. அனைத்து நிர்வாகிகளும், உறுப்பினர்களும் தமிழக முதல்-அமைச்சருக்கு ஒரு தபால் அட்டையில் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளைத் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.