Tamilசெய்திகள்

முக்கிய பிரமுகர்களின் பிறந்தநாளில் மாணவர்களுக்கு மதிய உணவில் சர்க்கரை பொங்கல் – சமூக நலத்துறை செயலர் அறிவிப்பு

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு சத்துணவுத் திட்டம் வாயிலாக மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதனுடன் சேர்த்து 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு மட்டும் காலை உணவுத் திட்டமும் தற்போது அமலில் உள்ளது. இதனைத் தொடர்ந்து இனி வரக்கூடிய நாட்களில் முக்கிய பிரமுகர்களின் பிறந்தநாளன்று மதிய உணவுடன் சேர்த்து இனிப்பு பொங்கல் கூடுதலாக வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக சமூக நலத்துறை செயலர் ஜெயஸ்ரீ முரளி தரன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பள்ளி மாணவர்களுக்கு முக்கிய தலைவர்கள், பிரமுகர்களின் பிறந்த நாளில் இனிப்பு பொங்கல் மட்டும் தற்போது வழங்கப்படுகிறது. வழக்கமான மதிய உணவு வழங்கப்படுவதில்லை. இதை மாற்றி இனிமேல் மதிய உணவுடன் சேர்த்து, சர்க்கரை பொங்கலும் அளிக்கலாம் என்று சமூக நலத்துறை ஆணையர் தெரிவித்துள்ளார். இதையடுத்து சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் மாணவர்களுக்கு முக்கிய தலைவர்களின் பிறந்த நாளில் மதிய உணவுடன் சேர்த்து இனிப்பு பொங்கல் வழங்கவும் அனுமதி வழங்கப்படுகிறது. இதற்காக ஒரு மாணவருக்கு ரூ2 ஒதுக்கப்படுகிறது. இதன் மூலம் 42 லட்சத்து 71 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறுவார்கள். இதற்கான செலவீனத்துக்காக 4 கோடியே 27 லட்சம் நிதி ஒதுக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.