Tamilசினிமா

மீண்டும் விபத்தில் சிக்கிய விஷால் – படப்பிடிப்பு நிறுத்தம்

விஷால் நடிப்பில் உருவாகி வரும் ‘லத்தி’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் இரவு பகலாக நடந்து வருகிறது. இப்படத்திற்காக எடுக்கப்பட்ட ஒரு காட்சியில் 100க்கும் மேற்பட்ட ரவுடிகள் விஷாலை சுற்றிகொண்டு கை, கால், உடம்பில் தாக்குவது போன்று படமாக்கப்பட்டது. அப்போழுது எதிர்பாராத விதமாக விஷால் காலில் நிஜமாகவே அடி விழ, துடிதுடித்து அவர் கீழே விழுந்தார்.

இதனால், எழுந்து நிற்க முடியாமல் வலியால் அவதிப்பட்ட விஷாலுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் உடனடியாக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டு, பின்னர் விஷாலை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர்.

காலில் எலும்பு முறிவு எதுவும் இல்லை என்று கூறிய மருத்துவர்கள், அவருக்கு பிசியோ சிகிச்சை அளித்தனர். தற்போது விஷாலுக்கு தீவிரமாக பிசியோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாளை மீண்டும் பரிசோதிக்கப்படு வலி இல்லையென்றால் மீண்டும் படப்பிடிப்பில் விஷால் கலந்து கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடந்த லத்தி படப்பிடிப்பில் விஷாலுக்கு கையில் காயம் ஏற்பட்டு படப்பிடிப்பு சில நாட்கள் ரத்தானது குறிப்பிடத்தக்கது.