Tamilசினிமா

மீண்டும் தொடங்கியது ‘லியோ’ படப்பிடிப்பு! – விஜய், திரிஷா இணைந்தனர்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’ (Leo-Bloody Sweet). இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இப்படத்தில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். லியோ படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஜய் மற்றும் திரிஷாவுக்கு லியோ படப்பிடிப்பிலிருந்து 5 நாட்கள் ஓய்வு கிடைத்ததாகவும் அப்போது ஓய்வு நேரத்தை பயன்படுத்தி விஜய், திரிஷா உள்ளிட்டோர் சென்னை வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இருவரும் மீண்டும் காஷ்மீர் படப்பிடிப்புக்கு திரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட நடிகர் விஜய்யின் புதிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.