Tamilசினிமா

‘மாஸ்டர்’ படத்தால் ஒடிடி ரிலீஸ் முடிவை கைவிட்டோம் – சுல்தான் தயாரிப்பாளர் பேச்சு

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் சுல்தான். இதனை ரெமோ பட இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கி உள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள, இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இப்படம் மூலம் அவர் தமிழில் அறிமுகமாகிறார்.

பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் சுல்தான் படத்திற்கு விவேக்-மெர்வின் இசையமைத்துள்ளனர். இப்படம் வருகிற ஏப்ரல் 2-ந் தேதி ரிலீசாக உள்ளது.

இந்நிலையில், இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் சுல்தான் பட தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேசியதாவது: சுல்தான் படத்தை ஓடிடி-யில் வெளியிட முடிவு செய்து, பிரபல ஓடிடி நிறுவனத்திடம் விற்க முயன்றோம். பின்னர் படத்தின் மீதிருந்த நம்பிக்கையாலும், மாஸ்டர் படத்திற்கு திரையரங்குகளில் மக்கள் கொடுத்த வரவேற்பை பார்த்ததாலும் முடிவை மாற்றிவிட்டோம்.

ஆரம்பத்தில் சுல்தான் படத்தை இரண்டு பாகங்களாக எடுக்க திட்டமிட்டோம். பின்னர் பாகுபலி படத்தின் எழுத்தாளர் விஜயேந்திர பிரசாத் கொடுத்த அறிவுரையின் படி, தற்போது அதனை ஒரே படமாக எடுத்துள்ளதாக அவர் கூறினார்.