Tamilசினிமா

மாற்றுத்திறனாளியாக நடிக்கும் சமந்தா

தமிழில் மாஸ்கோவின் காவிரி படத்தில் அறிமுகமாகி விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட கதாநாயகர்களோடு ஜோடி சேர்ந்த சமந்தா, தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். நடிகை சமந்தா நிறைய கமர்ஷியல் படங்களில் நடித்தாலும் சூப்பர் டீலக்ஸ், யூ டர்ன், ஓ பேபி உள்ளிட்ட படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

இவர் அடுத்ததாக நடிக்கும் புதிய படமொன்றில் மாற்றுத்திறனாளியாக நடிக்க சம்மதம் தெரிவித்து உள்ளார். இந்த படத்தை டாப்சி நடித்த கேம் ஓவர் படத்தை இயக்கி பிரபலமான அஸ்வின் சரவணன் இயக்குகிறார். தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் இப்படம் தயாராகிறது. இதில் வாய்பேசாத, காது கேட்காத மாற்றுத்திறனாளி பெண்ணாக சமந்தா நடிக்கிறார். இதற்காக சிறப்பு பயிற்சிகளும் எடுத்து வருகிறார். திகில் படமாக இது தயாராகிறது.

இதுகுறித்து சமந்தா கூறும்போது, “வாழ்க்கையில் புது புது சவால்களை ஏற்றால்தான் நமக்குள் உள்ள திறமை வெளியே வரும். இது எல்லா துறையினருக்கும் பொருந்தும். நடிகையாக எனக்கு இப்போது எந்தவித பயமும் இல்லை. எவ்வளவு கஷ்டமான கதாபாத்திரம் கொடுத்தாலும் செய்ய முடியும் என நம்புகிறேன். அடுத்த படத்தில் மாற்றுத்திறனாளி பெண்ணாக நடிக்கிறேன். ஏற்கனவே மகாநதி படத்தில் திக்குவாய் பெண்ணாக நடித்திருந்தேன். அந்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்ததாக எனக்கு பாராட்டுகள் கிடைத்தது” என்றார்.