X

மார்பக புற்றுநோய் அபாயத்தை 5 ஆண்டுகளுக்கு முன்பாகவே கணிக்கும் ஏஐ தொழில்நுட்பம்

மசாசுசெட்ஸ் தொழில்நுட்ப மையத்தின் CSAIL மற்றும் ஜமீல் மருத்துவமனை சார்பில் கடந்த 2021 ஜனவரியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆக துவங்கியுள்ளது. மார்பக புற்றுநோய் அபாயத்தை கணிக்கும் மமோகிராஃபி சார்ந்த மாடல்கள் குறித்த தகவல்களை ஆனந்த் மஹிந்திரா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டது தான் இதற்கு காரணம் ஆகும்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “ஒருவேளை இது கச்சிதமாக இருப்பின், ஏஐ நாம் கற்பனை செய்தது மற்றும் ஏற்கனவே கற்பனை கூட செய்ய முடியாத அளவுக்கு மிகவும் பயனுள்ள ஒன்றாக மாறிவிடும்,” என்று பதிவிட்டுள்ளார்.

பொதுவாக மனித உடலில் உள்ள மரபணுக்களில் சுமார் 9 ஆயிரம் மரபணு மாற்றங்கள் நிகழும். இந்த பிறழ்வுகளில் பெரும்பாலானவை தீங்கற்றவைதான். இவை நம் உடல்நல ஆரோக்கியத்தில் எந்த விளைவுகளையும் ஏற்படுத்தாது. சில பிறழ்வுகள் புரத செயல்பாட்டை சீர்குலைத்து புற்றுநோய் ஏற்படுத்தும் அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். புற்றுநோய் பாதிப்பை ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால், அதனை குணப்படுத்தும் வாய்ப்புகள் அதிகம் ஆகும். ஆனால், காலதாமதமாக கண்டறியப்பட்டால் குணப்படுத்துவது சிக்கலான காரியம் ஆகும்.

உலகளவில் தாமதமாக கண்டறியப்படுவதாலேயே புற்றுநோய் சார்ந்த உயிரிழப்புகள் அதிகரிக்கின்றன. இத்தகைய சூழலில், மார்பக புற்றுநோய் பாதிப்பை அதிகபட்சம் சில ஆண்டுகள் முன்பே கண்டறிந்து தெரிவிக்கும் ஏஐ தொழில்நுட்பம் இருந்தால் எப்படி இருக்கும்? இதைத் தான் மசாசுசெட்ஸ் தொழில்நுட்ப மையத்தின் கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆய்வகம் (CSAIL – Computer Science and Artificial Intelligence Laboratory) மற்றும் ஜமீல் கிளினிக் ஃபார் மெஷின் லெர்னிங்-ஐ சேர்ந்த ஆய்வாளர்கள் இணைந்து உருவாக்கி உள்ளனர். இவர்கள் 2021 ஆம் ஆண்டு உருவாக்கி இருக்கும் டீப் லெர்னிங் சிஸ்டம் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் பாதிப்பை வெறும் எக்ஸ்-ரே அல்லது மாமோகிராம் பரிசோதனை மூலமாகவே கணித்து விடும்.

மிராய் (MIRAI) என அழைக்கப்படும் புது ஏஐ சிஸ்டம் நோயாளிகளின் உடல்நிலை விவரங்களை கொண்டு எதிர்கால மாற்றங்களை கணிக்கும் திறன் கொண்டிருக்கிறது. இந்த சிஸ்டத்தை ஆய்வாளர்கள் மசாசுசெட்ஸ் பொது மருத்துவமனையின் சுமார் 2 லட்சம் நோயாளிகளிடம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது.