Tamilசெய்திகள்

மாநகர பேருந்து நடத்துனர்களுக்கு டிக்கெட் வசூல் இலக்கு நிர்ணயம்

14-வது ஊதிய பேச்சுவார்த்தையின்படியும், அகவிலைப்படி உயர்வு காரணமாகவும் மாநகர போக்குவரத்து கழகத்துக்கு மாதம் ரூ.10 கோடி வரை தேவை என்பது அதிகரித்துள்ளது. இந்த பணத்தை திரட்ட போக்குவரத்து கழகம் பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகிறது.

இதில் பஸ்களில் விளம்பரங்கள் செய்யப்படுவது மூலமாக மாதம் ரூ.3.40 கோடி வரை வருவாய் வருகிறது. மீதம் உள்ள ரூ.6 கோடியே 60 லட்சத்தை பஸ் பயணிகளுக்கு வழங்கப்படும் டிக்கெட் வசூல் மூலம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

பஸ்களில் முழுமையான அளவு பயணிகளை ஏற்றிச் சென்று கட்டணங்களை வசூல் செய்து வருவாயை அதிகரிக்க வேண்டும் என்றும் நிதிச்சுமையை குறைக்க பஸ் கண்டக்டர்களுக்கு டிக்கெட் வசூல் இலக்கு நிர்ணயம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அனைத்து மண்டல மேலாளர்களும், கிளை மேலாளர்களும் தனிப்பட்ட கவனம் செலுத்தி போக்குவரத்து கழகத்துக்கு வருவாயை பெருக்கும் வகையில் டிக்கெட் வசூல் இலக்கை அடைய தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.