Tamilசெய்திகள்

மஸ்கட்டில் இருந்து கேரளா வந்த விமானத்தில் ஒரு கிலே தங்கம் கடத்தி வந்த விமான பணிப்பெண் கைது

கேரள மாநிலத்தில் உள்ள பல்வேறு விமான நிலையங்கள் வழியாக வெளிநாடுகளில் இருந்து பலரும் தங்கம் மற்றும் போதைப்பொருட்கள் கடத்தி வருகின்றனர். அவர்களை விமான நிலையத்தில் உள்ள வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் மற்றும் போலீசார் பிடித்து கைது செய்து வருகின்றனர். அவர்களிடம் இருந்து கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் அடிக்கடி நடந்து வரும் நிலையில், நாட்டிலேயே முதல்முறையாக விமான பணிப்பெண் ஒருவர், தங்கம் கடத்தி வந்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மலக்குடலில் மறைத்து வைத்து தங்கத்தை கடத்தி வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரது பெயர் சுரபி காதுன்.

கொல்கத்தாவை சேர்ந்த இவர், மஸ்கட்டில் இருந்து கேரள மாநிலம் கண்ணூர் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். சம்பவத்தன்று விமானம் கண்ணூர் விமான நிலையத்ததை வந்தடைந்ததும் பயணிகள் அனைவரும் சோதனை செய்யப்பட்டனர். சந்தேகத்தின் பேரில் சுரபு காதுனையும் வருவாய் புலனாய்வு இயக்குனரக பணியாளர்கள் சோதனை செய்தனர்.

அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், சுரபி காதுன் தனது மலக்குடலில் 960 கிராம் தங்கத்தை கலவை வடிவில் மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து பல்வேறு கட்ட விசாரணைக்கு பிறகு சுரபி காதுன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாட்கள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். அதன்பேரில் கண்ணூர் பெண்கள் சிறையில் சுரபி காதுன் அடைக்கப்பட்டார்.

இது தொடர்பாக வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்தியாவில் மலக்குடலில் தங்கத்தை மறைத்து கடத்தியதற்காக விமானக் குழு உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்ட முதல் வழக்கு இது தான். சுரபி காதுன் பலமுறை தங்கம் கடத்தில் ஈடுபட்டு இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அதன் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கடத்தல் கும்பலில் கேரளாவைச் சேர்ந்த பலருக்கு தொடர்பு இருப்பதும் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.